Search This Blog

Wednesday, December 12, 2012

உலக மொழி அனைத்துக்கும் தமிழ் மொழியே ஆரம்பம்...

உலக மொழி அனைத்துக்கும்
தமிழ் மொழியே ஆரம்பம்;


எழுத்துக்கு 'அ'கரம் முதல்
திருக்குறளே ஆதாரம்!


தப்பில்லா இலக்கணத்தில்
தரமான இலக்கியங்கள்;
இயல் இசை நாடகமாய்
முத்தமிழில் முழக்கமிடும்!


அளவுக்கும் அதிகம் உண்டால்
அமிர்தம் கூட விஷமாகும்;
அமுத மொழி தமிழ் மட்டும்
எப்பொழுதும் தித்திக்கும்!


தெய்வ மொழி தமிழுக்கு
தெய்வம் எங்கள் முருகன்;
முருகனென்றால் அழகனென்று
மணக்கும் தமிழ் சொல்லும்!


தமிழுக்கு இணை இங்கே
வேறு மொழி உண்டோ?
பாரதியும் இதை அன்றே
பாடிவிட்டு சென்றான்!


ஆன்மிக அன்பர்களை
அணைத்திழுக்கும் நூல்கள்:
ஆழ்வார்கள் பிரபந்தம்;
திருத்தொண்டர் புராணம்;


திருமந்திரம், திருவருட்பா,
திருவாசகம், தேவாரம்,
திருமுறைகள் பலவும்
தெய்வ மணம் காட்டும்!


கல் தோன்றி மண் தோன்றா
முன் தோன்றி மூத்தத் தமிழ்,
முதுமை என்றும் அடைவதில்லை;
முடிவு மட்டும் அதற்கில்லை!


அறிவியலும், விஞ்ஞானப்
பொறியியலும் தமிழில்,
அகிலமெல்லாம் சுற்றிவரப்
பெருமை கொள்வாய் தமிழா!


“சாகையிலும் தமிழ் படித்தே சாக வேண்டும்
சாம்பலிலும் தமிழ் மணந்தே வேக வேண்டும்”

-பாரதிதாசன். 

 

 

 

தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.

 

 

 

2 comments: