Search This Blog

Saturday, December 23, 2023

குறுந்தொகையில் உள்ளுறை உவமம்

 

குறுந்தொகையில் உள்ளுறை உவமம்


திருமதி. செ.சத்யா

முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி,

மயிலம் - 604 304.

திண்டிவனம் வட்டம்.

Mail ID : sathyasenthil77@gmail.com

 

முன்னுரை

சங்ககாலப் புலவர்கள், சங்கப் பாடல்களில் அக உணர்வை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த, உள்ளுறை உவமை என்னும் இலக்கிய உத்திகளை (நயங்களை) மிகச் சிறப்பாக கையாண்டுள்ளனர். இதை "குறிப்புப் பொருள் உத்தி" என்றும் அழைப்பர். வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு வேறொரு பொருள் புலப்படுவதுபோல அமைப்பது "உள்ளுறை" உத்தியாகும். உள்ளுறை உத்தியில் உவமையைச் சொன்ன அளவில் உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இருக்காது. உவமிக்கப்படும் பொருள், தெய்வம் ஒழிந்த கருப்பொருளாக இருத்தல் வேண்டும் என்பது இலக்கண விதி. "உள்ளே மறைவாகப் படிந்து இருக்கும் குறிப்புப் பொருளை உவமை ஆற்றலால் வெளிப்படுத்துவதால்" இதனை "உள்ளுறை உவமை" என்றனர். குறுந்தொகைப் பாடல்களில் பயின்று வந்துள்ள உள்ளுறை உவமையினை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.

தொல்காப்பியத்தில் உள்ளுறை

            தொல்காப்பியர், எல்லையற்ற இன்பம் தருவதே உள்ளுறை அமைப்பதன் நோக்கம் என்பதை,

"அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம்

தன்வயின் வருதலும் வகுத்த பண்பே"  - (தொல்.பொருள்.48)

என்று எடுத்துரைத்துள்ளார். மேலும், பொருள் சார்ந்து இவ்வுள்ளுறை ஐந்து வகைப்பட்டு வரும் என்பதை தொல்காப்பியர்,

 

"உடனுறை, உவமம், சுட்டுநகைச் சிறப்பென

கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே"   - (தொல்.பொருள்.47)

என்று கூறியுள்ளார். உடனுறை உள்ளுறை, சுட்டு உள்ளுறை, சிறப்பு உள்ளுறை, உவம உள்ளுறை, நகை உள்ளுறை என்னும் ஐந்து உள்ளுறைகளைக் கூறிய அவர், உவம உள்ளுறையைப் பற்றியும் (தொல்.அகத்.49, 51), சிறப்பு உள்ளுறையைப் பற்றியும் (தொல்.பொருள்.50) சில கருத்துக் கூறி விளக்கியுள்ளார்.

 

உள்ளுறை உவமம்

                        "உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள்  முடிக என

உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம்"   - (தொல்.பொருள்.51)

என்று தொல்காப்பியம் கூறுகிறது.

            வெளிப்படையான உவமைபோல் அல்லாமல் மறைமுகமான உவமையாக, நாமே குறிப்பாக உணர்ந்து கொள்ளும் விதமாக அமைவது உள்ளுறை உவமம். அதாவது உவமானம் சொல்லப்பட்டிருக்கும். உவமேயம் (புலவர் சொல்ல விரும்பும் பொருள்) நாம் ஊகித்து அறியுமாறு உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

 குறுந்தொகைப் பாடல்களில் உள்ளுறை

            தலைவி தன்னை இகழ்ந்து கூறினால் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின் பக்கத்திலுள்ளோர் கேட்கும்படி "தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே இருந்து விட்டு, தலைவிபாற் சென்று அவளுக்கு அடங்கி அவள் மனம்போல் ஒழுகினான்: தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்" என்று உள்ளுறை உவமையுடன் பரத்தை தனது தோழியிடம் சொல்வதை,


"கழனி மாவத்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கதூவும் ஊரன்

எம்மில் பெருமொழி கூறித் தம்மில்

கையும் காலுமு; தூக்கத் தூக்கும்

ஆடியிற்பாவை போல மேவன செய்யும்

தன்புதல்வன் தாய்க்கே"  -  (குறுந்.170)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. பரத்தை அவளாகவே தலைவனை நாடிச் செல்லவில்லை, மாறாக அவனே வந்து அவளிடம் இன்பம் துய்க்க வந்தான் என்பதையும், மாமரத்தின் மாங்கனியை நாடி வாளை மீன் போகவில்லை, மாங்கனியே தானாக  வந்து வாளை மீனின் வாயில் விழுந்தது என்பதையும் அழகாக எடுத்துரைத்துள்ளார் புலவர். இங்கு வாளை மீன் பரத்தைக்கும், மாங்கனி தலைவனுக்கும் உவமை ஆகின்றன. இந்த உவமைக்கு உள்ளுறை உவமம் என்று பெயர்.

அருவி ஊழ்வினைக்கும், அருவியின் நீரால் விளைந்த கொறுக்காந்தட்டை ஊழ்வினையால் தோன்றிய காதலுக்கும், யானை கொறுக்காந்தட்டையை உண்டது தலைவனும் தலைவியும் அந்தக் காதலில் இன்புற்றதற்கும் உவமைகளாக எடுத்தாளப்பட்டுள்ளதனை,


"பலவும் கூறுகவ தறியா தோரே

அருவி தந்த நாட்குர லெருவை

கயனா டியானை கவள மாந்தும்

மலைகெழு நாடன் கேண்மை

தலைபோ காமைநற் கறிந்தனென் யானே"  - (குறுந்.170)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. இதில், குளத்தை நாடிச் செல்லும் யானை, எவ்வித முயற்சியும் இல்லாமல், அருவியின் நீரால் விளைந்த கொறுக்காந்தட்டையை உண்டதைப் போல், விதிவசத்தால் தலைவனும் தலைவியும் காதலித்தார்கள் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமமாகும். 

     தலைவன் செல்லும் வழியில் உதிர்ந்து கிடக்கும் வாகைப் பூ பொங்கருக்குள் நுழைந்து பேய்க்காற்று அதனை அள்ளிச் செல்வதாகவும், அக்காற்று மோதிய வாகை மரத்து வெள்ளை நிற நெற்றுகள் ஒலிக்கும் என்பதனை உள்ளுறை உவமையுடன் எடுத்துரைப்பதனை,


"வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென

நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்

மலையுடை அருஞ்சுரம் என்பநம்

முலையிடை முனிநர் சென்ற ஆறே"   - (குறுந். 39)

என்ற குறுந்தொகைப் பாடல் வரிகள் அழகாக எடுத்துரைக்கின்றன. பெருங்காற்றால் உதிர்ந்து கிடக்கும் பூ காற்றில் பறப்பதும், உலர்ந்த நெற்றுகள் ஒலிப்பதும் இயல்பு. இதனை, பூ அள்ளிற்று என்றும், நெற்றுகள் அலரின என்றும் நயமுடன் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பாடலடிகளில் "பூவுக்காக நெற்று அலறுவது கண்டு தலைவன் தலைவிக்காக வருந்தி மீள்வான்" எனக் கொள்வது உள்ளுறை உவமமாக எடுத்தாளப்பட்டுள்ளது.

தலைவி பித்து பிடித்தது போல இருக்கிறாள். அதற்குக் காரணம் தெய்வக்குற்றம் எனக் கட்டுவிச்சி சொன்னாலும், உண்மைக் காரணம் அவளது காதல் என்பதனை தோழி உவமையுடன் எடுத்துரைப்பதனை,


"அரும்பற மலர்ந்த கருங்கால்  வேங்கை

மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை

பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்

தகாஅன் போலத் தான்றீது மொழியினும்

தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே

தேக்கொக் கருந்து  முள்ளெயிற்றுத் துவர்வாய்

வரையாடு வன்பறழ்த் தந்தைக்

கடுவனு மறியுமக் கொடியோ னையே"        - (குறுந். 26)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. தலைவியின் நிலைக்கு உண்மைக் காரணம் அவளது காதல். அவள் தலைவனோடு நட்புடன் இருந்தாள். அதற்கு அந்த இடததில் இருந்து ஆண்குரங்கு சாட்சி என்கிறாள் தோழி. "தலைவியின் நோய்க்குக் காரணம் ஒரு தலைவனோடு செய்த நட்பே" என்று உள்ளுறை உவமத்துடன் அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பெண் யானையைத் தழுவிக் கொண்டு ஆண் யானை மன்றத்துக்கு வருவது போல, தலைவியை மணந்து கொண்டால் தலைமகனும் தலைமகளும் ஊருக்குள் வந்து வீட்டில் தங்கலாம்; என்னும் உள்ளுறையாக கொண்டதனை,

                     "வந்த வாடைச் சில்பெயற் கடைநாள்

நோய்நீந் தரும்படர் தீரநீ நயந்து

கூறின் எவனோ தோழி நாறுயிர்

மடப்பிடி தழீஇத் தடக்கை யானை

குன்றச் சிறுகுடி யிழிதரு

மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே" - (குறுந். 332)

என்ற குறுந்தொகைப் பாடல வரிகள் அழகுற எடுத்துரைக்கின்றன.

தினைப் புனத்தைக் காவல் காப்பவன் ஏற்றிய கொள்ளிக் கட்டைக்குப் பயந்து ஓடிய யானை, பின்னர் வானத்திலிருந்து விழும் விண்மீன் ஒளிக்கு அஞ்சும் என்பது களவின் போது தலைவியின் உறவினர்க்கு அஞ்சும் தலைவன் வந்து பெண் கேட்டுத் திருமணம் செய்து கொள்ளவும் அஞ்சி வரைவு நீட்டிக்கின்றான் என்பதைக் குறிக்கின்ற உள்ளுறை உவமத்தை,


"முனிர்படர் உழந்த பாடில் உண்கண்

பனிகால் போழ்ந்து பணியெழில் ஞெகிழ்தோள்

மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு

நல்ல என்னுஞ் சொல்லை மன்னிய

ஏனலஞ் சிறுதினை காக்குஞ் சேணோன்

ஞெகிழியிற் பெயர்ந்த நெடுநல் யானை

மின்படு சுடரொளி வெரூஉம்

வான்தோய் வெற்பன் மணவா ஊங்கே"         - (குறுந்.357)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் நயமுடன் எடுத்துரைக்கின்றன.

பழைய மழை பெய்வதால் பதம் கெட்டு வடிவம் மாறிய சொத்தையான காய்களையுடைய எள்ளுச்செடி நிறைந்த, குறைந்த மழையையுடைய மழைக்காலக் கடைசி நாள்களில், சேற்றில் இருப்பதை வெறுத்த, சிவந்த கண்ணையுடைய எருமை, நள்ளிரவு நேரத்தில் 'ஐ' எனக் கத்தும். அந்த அச்சம் நிறைந்த பொழுதிலும் கூட நாழிகைக் கணக்கர் இரவிலே காலக்கணக்கை வருந்தி ஆராய்வது போல தலைவன் பிரிவை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணான துன்பத்தால் என் கண்கள் தூங்க தோழி என்று எடுத்துரைப்பதனை,

                     "பழமலை பொழிந்தெனப் பதனழிந் துருகிய

சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்

சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்

நள்ளென் யாமத் தையெனக் கரையும்

அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்

துஞ்சா வாழி தோழி காவலர்

கணக்காய் வகையின் வருந்தியென்

நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே"     - (குறுந். 261)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் நயமுடன் எடுத்துரைக்கின்றன. இப்பாடல் வரிகளில், இற் செறிக்கப்பட்ட தலைவியின் நிலைமைக்குச் சேற்றில் கரையும் எருமை நிலையினை உள்ளுறை உவமாக எடுத்தாண்டுள்ளனர்.

இனிய பூங்கொத்தையுடைய புன்னை மரத்தின் அழகிய புள்ளிகள் பெற்ற நிழலில், பொன் போன்ற வரிகளையுடைய நண்டைப் பிடித்து அலைத்து விளையாடிய அந்த மகிழ்ச்சியான பழைய நிலையிலிருந்து தளர்ந்து நெகிழ்ந்த உளையலையுடையவளாக ஆனவள், இப்போது பசலை பரந்த மேனியையுடையவளாகவும் ஆகி விட்டாள் என்பதை உள்ளுறை உவமையுடன் எடுத்துரைப்பதனை,


"கழிதேர்ந் தசைஇய கருங்கால் வெண்குரு

கடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல்

உடைதிரை ஒலியில் துஞ்சுந் துறைவ

தொன்னிலை நெகிழ்ந்த வளைய ளீங்குப்

பசந்தனள் மன்னென் தோழி யென்னொடும்

இன்னிணர்ப் புன்னையும் புகர்நிழற்

பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றே"          - (குறுந்.303)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகுற எடுத்துரைக்கின்றன. கழியில் இரை தேர்ந்து உண்டு இளைப்புற்ற நாரை தாழையில் உறங்கும் என்றது களவொழுக்கத்தில் குறியிடம் பெற்று இன்புற்ற நீ வரைந்து இல்லத்தில் தங்கி இன்புறுவாயாக என்னும் உள்ளுறையை கொண்டதாக இப்பாடல் வரிகள் அமைந்துள்ளது.

 ஆய்வு முடிவுரை

            பழந்தமிழர்கள் தங்கள் மகிழ்ச்சியையும், மன வருத்தத்தையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூற "உள்ளுறை உவமை" இலக்கிய உத்திகளாகக் கையாண்டுள்ளது நாகரிகத்தின் வெளிப்பாடாக கடைபிடித்துள்ளனர் என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த உள்ளுறை நுட்பமாக புரிந்து கொள்வதாக அமைகின்றன. இலக்கியப் பாடல்களில், கதை மாந்தர்களின் செயல்களை வெளிப்படையாக உணர்த்தாமல் மறைமுகமாக அன்பின் வலிமையினை விளக்கியுள்ளனர். 401 பாடல்களும்  401 சான்றுகளாக திகழ்கின்றன. குறுந்தொகைப் புலவர்கள் தம் நுண்மான் நுழை புலத்தால்  உள்ளுறை உவமத்தை கொட்டி வைத்திருக்கும் நல்ல குறுந்தொகையை நாளும் சுவைத்துப் போற்றுவோம்.

 

துணை நின்ற நூல்கள்:

1.         குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர்.உ.வே.சாமிநாதையர், டாக்டர், உ.வே.சா.நூல் நிலையம், சென்னை.

2.         குறுந்தொகை மூலமும் உரையும், கழக வெளியீடு, முதல் பதிப்பு மே-1955,அப்பர்அச்சகம் சென்னை.

3.         தொல்காப்பியம் பொருளதிகாரம் - மூலமும் உரையும், இளம்பூரனர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

4.         தொல்காப்பியம் உரைவளம் - பொருளதிகாரம் உவமவியல், ஆ.சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

5.         சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கிய கொள்கைகள்), தமிழண்ணல், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.

6.         ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் 1985, மதுரை, நல்ல குறுந்தொகை, கா.காளிமுத்து அவர்களின் கட்டுரை.

7.         குறுந்தொகை தெளிவுரை, புலியூர்க்கேசிகன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.

8.         குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு, மனோன்மணி சண்முகதாஸ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

9.         குறுந்தொகை - தமிழ்க்காதல் (கற்றுடைத்துக் கோத்தது), கு.மா.பாலசுப்பிரமணியம், முதற் பதிப்பு, 2007, பாரதி புத்தகாலயம், சென்னை.

10.       சங்க இலக்கிய வரலாறு, பேரா.காவ்யா சண்முகசுந்தரம்.

Thursday, December 21, 2023

கி.ரா. வின் புதினங்களில் கரிசல் வாழ் மக்களின் பண்பாடு

 

கி.ரா. வின் புதினங்களில் கரிசல் வாழ் மக்களின் பண்பாடு

 

திருமதி. செ.சத்யா

உதவிப் பேராசியர்,

தமிழ்த்துறை,

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி,

மேல்மருவத்தூர் - 603 319.

மின்னஞ்சல் : sathyasenthil77@gmail.com


முன்னுரை

சங்க இலக்கியங்களும், சிற்றிலக்கியங்களும், காப்பிய இலக்கியப் படைப்புகளும், செய்திகளைக் கூறும் தகவல் களஞ்சியங்களாக மட்டுமல்லாது படைக்கப்படட காலத்தின் வரலாற்றுக் கூறுகளையும், சமூகத்தின் வலராற்றுப் பின்னணியையும் பண்பாடுகளையும் வெளிப்படுத்தும் காரணிகளாகவும் திகழ வேண்டும். அந்த வரிசையில் தோன்றிய எண்ணற்றப் படைப்பாளர்களுள் ஒருவராக திகழ்ந்த கி.ரா. வின் எழுத்துலகம் தனித்துவம் மிக்கது. காலம்காலமாகப் பலதரப்பட்ட கிளைத்தன்மைகளுடன் பரந்து விரிந்து கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் கரிசல் இலக்கியம் என்ற புதிய வகை கி.ரா. வழியாக அறிமுகம் ஆயிற்று. கி.ரா. வின் எழுத்துலகம் முற்றிலும் புதிய செய்திகளையும், புதுவகைத்தன்மையினை விவரிக்கும் பின்னணியில் தாம் வாழும் சமூகத்தை இணைத்து இலக்கியத்தடத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது.

பழம்பெரும் தமிழ் எழுத்தாளரும், 'கரிசல் இலக்கியத்தின்' முன்னோடியாக அறியப்பட்ட கி.ரா. என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் எழுதிய “கோபல்லபுரத்து மக்கள்”  நாவலுக்காக 1991ல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். கரிசல் மண்ணின் கதைகளை அவர்களின் மொழியில் எழுதியதுடன், கரிசல் வட்டார அகராதியைத் தொகுத்ததன் மூலம், வட்டார மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திட உழைத்தவர்.

கி.ரா. வின் கரிசல் இலக்கியம் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதோடு, புதிய கரிசல் இலக்கியப் படைப்புகளுக்கும் தோற்றுவாயாக அமைந்து வருகின்றது. இவ்வாய்வில் கி.ரா. வின் மூன்று புதினங்களில் விவரிக்கப்பட்டுள்ள (1.கோபல்ல கிராமம், 2.கோபல்லபுரத்து மக்கள், 3.அந்தமான் நாயக்கர்) கரிசல் வாழ் மக்களின் பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் எடுத்துக் காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

கரிசல்  இலக்கியம்

          கரிசல் இலக்கியத்தின் களமாகக் கரிசல் பகுதியும், மாந்தர்களாக, கரிசல் பகுதி மக்களுமே இடம் பெற்றுள்ளனர். கரிசல் இலக்கியத்திற்கு அடிப்படையாக அமைந்திருப்பது இப்பகுதியில் நிலவும் வறுமை – வறட்சி, மற்றும் பொருளாதாரப் பின்னணி ஆகியனவே. 'கரிசல் பூமி' என்றழைக்கப்படும் பகுதி திருநெல்வேலி மாவட்டத்தின் கோவில்பட்டியை ஒட்டித் தொடங்கும் பகுதியாகும். இம்மண்ணின் நிறத்தைக் கொண்டே இப்பகுதி, 'கரிசல்' என்றழைக்கப்படுகிறது. இதனை,

"கரிய நிறம் கொண்ட மானாவாரி புஞ்சை நிலத்துக்குத்தான்

கரிசல் என்று பெயர். மானம் பார்த்த பூமி – மழையை

நம்பித்தான் வாழ்க்கை"1

என்று "கரிசல் காட்டுக் கடுதாசி" முன்னுரை விளக்கிக் கூறுகிறது.

"கரிசல் எழுத்துக்கள் "வட்டார இலக்கியம்"2 என்றும்" அழைக்கப்படுகிறது.

கரிசல் பண்பாடு

            கரிசல் பகுதியை அடிப்படையாகக் கொண்டு இலக்கியம் படைத்திருக்கும் கி.ரா. வின் எழுத்துக்களில் கரிசல் பகுதி மக்களே இடம் பெறுகிறார்கள். கி.ரா. அனுபவரீதியாகக் கண்ட, கேட்ட மனிதர்களே, அவரின் கதை மாந்தர்களாகியுள்ளனர் என்பதனை,

"காடுகளில் ஆடு மேய்ப்பவர்களோடு சேர்ந்து சுற்றித்திரிந்து

அவர்களின் கஞ்சியில் பங்கு கொண்டு எத்தனையோ நாட்கள்

அலைந்திருக்கிறேன். அவர்களிடமிருந்துதான் கதைகள்

கேட்டேன். தமிழ் கற்றுக் கொண்டேன். ஆடு மேய்ப்பவர்கள் –

இவர்கள் தான் எனக்கு ஆசான்கள்"3

என்று கி.ரா. க. பஞ்சாங்கம் நூலுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிடுகின்றார்.

விவசாயம்

கி.ரா. தம் மூன்று புதினங்களிலும் கரிசல் விவசாயத்தை மிக நேர்த்தியாகக் கோடிட்டுக் காட்டுகிறார். கதைப் போக்கில் விவசாயச் செய்திகளை மிக நுணுக்கமாகவும், நுட்பமாகவும் விளக்கப்பட்டுள்ளது. கதைப் போக்கில் விவசாய முறைகளைப் பாத்திரப் படைப்புகளைக் கொண்டு கி.ரா. அமைக்கிறார். கோடை காலத்தில் உழவு செய்யும் முறையை தனது "கோபல்ல கிராமம்" புதினத்தில்,

".................................... கோடை உழவு

முடிந்து, முதல் மழை பெய்ததும், விதைப்புக்குத் தயாராக்க

நிலத்தை உழ ஆரம்பிக்கும் உழவுக்கு எழுப்படிப்பு என்று

சொல்கிறது. இப்படி உழுது வைத்தால் தான் அடுத்துப்

பெய்யும் மழைநீர் நிலத்தை நன்றாக நனைக்கும். அதோடு

பெய்த முதல் மழையில் முளைவிட்ட களைகளும் போகும்"4

என்று கோடை காலத்தில் கரிசல் மண்ணில் விவசாயம் செய்யப்படும் முறையினை அழகாக விவரிக்கிறார். மேலும், இவ்விவசாய முறையில், "ரெட்டைக்கலப்பை" முறையில் உழும் முறையையும் சுட்டுகின்றார். மாடுகளைக் கலப்பையில் பூட்டும் முறை, கலப்பைக் குத்திகளைக் கனம் குறைவாக்கிக், கூராகச் செதுக்கி உழும் முறை என விவசாயத்தின் நுட்பத்தினை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

விவசாயம் பற்றிய செய்திகளோடு, விவசாயத் தொடர்புடைய பல செய்திகள் மூன்று புதினங்களிலும் பரவலாக எடுத்தாளப்பட்டுள்ளன. கரிசல் விவசாயம் செய்ய உதவும் கருவிகளாக,

"எருமைத் தோலினால் முறுக்கப்பட்ட உழவு வடங்கள்"5

"ஒரே ஏரில் பூட்டப்படும் ரெட்டைக் கலப்பைகள்"6

"கனம் நிறைந்த நாங்கிள் மர ஏர்க்கால் கலப்பைகள்"7

லேசான தேக்கு ஏர்க்கால் கலப்பைகள்"8

"உழவுத்தும்பு"9

"பல்க் கம்பி"10

போன்றவை மிகச் சிறப்பாகக் கூறப்படுகின்றன.

பிணையல் ஏற்றுதல்

            கரிசல் விவசாயத்தில் பெரும்பான்மையாக விளைவிக்கப்படும் தானியம் "கம்பம் புல்". அக்கம்பம் புல்லை அறுவடை செய்து அதை உதிர்க்கும் நிகழ்ச்சியை மிக விரிவாகக் "கோபல்லபுரத்து மக்கள்" புதினம் காட்டுகிறது. மாடுகளைக் கட்டி களத்துமேட்டில் விவசாயிகள் செய்யும் இப்பணி "பிணையல் ஏற்றுதல்" என்று கி.ரா. வால் விளக்கமாகச் சுட்டப்பட்டுள்ளது.

 

"பிணையல்க் கண்ணிகளில் மாடுகளைப் பிணைத்தார்கள்.

வட்டம் போட்டிருந்த கம்மங் கதிர்களின் மேல்

பிணையல்களை "பொலி பொலி பொலி" என்று விரைவாகச்

சொல்லிக் கொண்டே அதில் ஏற்றினார்கள். மாடுகள் ஆவலோடு

வேகமாய் வந்து கம்மங்கதிர்களை வாய் நிறைய

அள்ளித்தின்று கொண்டே வட்டம் சுற்றி வந்தன"11

என்று பிணையல் ஏற்றும் நிகழ்ச்சி விரிவரிக்கப்படுகிறது. மேலும், அவ்வாறு பிரிக்கப்பட்ட கம்பங்கதிர்களைக் கவிராயர்களுக்கும், மாடுகளுக்கும் கரிசல் விவசாயிகள் தானம் செய்யும் மனப்பான்மையையும் கி.ரா. வினால் சுட்டப்படுகின்றது.

உணவு

கரிசல் மக்களில் உணவு முறை புதினங்களில் ஓர் அங்கமாகத் தரப்பட்டுள்ளது. கரிசல் மண்ணின் உணவு, உழைப்பாளிகளின் கடின வாழ்க்கையையும், விவசாயிகளின் வறுமை வாழ்க்கைப் போக்கையும் மிகவும் நுட்பமாகக் சுட்டுவதனை,

"..................................................................

தலையில் கஞ்சிக் கலயம் இருந்தது. கலயத்தில் நீத்துப் பாகம்

அதில் தேங்காய்ப் பருமனில் பன்னிரெண்டு கம்மஞ்சோற்று

உருண்டைகள் கலயத்துக்கு மூடி சிரட்டை, அதில்

எண்ணெயில் வறுக்கப்பட்ட வத்தல்களும் நார்த்தங்காய்

ஊறுகாயும் கலத்தின் வெளிப்புறம் மேலே ஒட்டி

வைக்கப்பட்ட காணத்துவையல்"12

என்று விவசாயிகளின் உணவு என சுட்டுகின்றார் கி.ரா.

நம்பிக்கைகள் - சடங்குகள்

            கோபல்ல கிராமத்து மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட நம்பிக்கைகள், சடங்குகள் முதலானவை மூன்று புதினங்களிலும் பரவலாகக் காட்டப்பட்டுள்ளன. அதிலும் அவை "கோபல்ல கிராமம்", "கோபல்லபுரத்து மக்கள்" ஆகிய இரண்டு புதினங்களில் தான் மிகுதியாகக் குறிப்பிடப்படுகின்றன.

ஒருவர் உடலில் இருந்து உயிர் பிரியும்போது அழக் கூடாது என்று நம்பினர். இதனை,

"ஆத்மா பிரிந்து பயணப்படும்போது நாம் அழுதால் நம்முடைய

கண்ணீர் அது சென்று கொண்டிருக்கும் வழியில் குறுக்கே

வெள்ளம் போல் பரவிப் பெருகி அதனுடைய பயணம்

தடைப்பட்டுப் போகும். ஆத்மா பிரிந்த பிறகு அழலாம்.

பிரிந்து கொண்டிருக்கும் போது அழவே கூடாது"13

என்று கி.ரா. தனது ‘கோபல்ல கிராமம்’ என்ற புதினத்தில் குறிப்பிடுவதன் வழியாக அறிய முடிகின்றது.

நாட்டுப்புறப் பாடல் பாடும் வழக்கம்

மக்கள் வாழ்க்கை பதிவுகள் யாவும் நாட்டுப்புறப்பாடலாக வெளிப்படுகின்றன. மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாக இப்பாடல்கள் விளங்குகின்றன. மக்களின் இன்பம், துன்பம், திருவிழாக் காலங்களில் இப்பாடல்கள் வாய்மொழியாகப் வெளிப்படுகின்றன என்பதனை,

"ஆலம் இலைபோல் அடிவயிறு

அசந்த நெத்தியில் புருவக்கட்டு

சோலைக்கிளி போல எம் பிறவிக்கு

சொந்தக் கிராமம் கோபல்லம்.

அம்மா பிறந்தது அய்யோத்தி – அம்மா

சடை பிறந்தது சதுரகிரி

வேம்பு பிறந்தது வேனகிரி – நாங்க

விளையாட வந்தது கோபல்லம்.

செங்கல் அறுத்த கிடங்குக்குள்ளே நாங்க

சீரகச் சம்பா விளையவச்சோம் - இப்பெ

பச்சைக்கிளி வந்து கெச்சட்டம் போடுது

பறந்தடிங்கடி தோழிப் பெண்ணே"14

என்னும் கி.ரா. வின் ‘கோபல்ல கிராமம்’ எனும் புதினத்தின் பாடல் அடிகள் வழியாக அறிய முடிகின்றது.

மருத்துவம்

            கோபல்ல கிராம சமூக மக்களிடையே நிலவிய மருத்துவக் குணங்கள் பற்றிய நம்பிக்கைகளை கி.ரா. விரிவாகப் படைக்கின்றார். ஆந்திராவிலிருந்து புறப்பட்டு வழிநடையாக வந்த வாழ்க்கையும், கரிசல்காடு அமைவதற்கு முன் அமைந்திருந்த வேட்டுவ வாழ்க்கையும், மருத்துவம் தொடர்பான அறிவினை அம்மக்களுக்கு அளித்தன என்பதனை கி.ரா. தனது புதினங்களில் சுட்டுவதனை,

            "சோற்றுக் கத்தாழையை உரித்துத் தண்ணீரில் அலசி, அதன்

கசப்பை நீக்கி உண்டால் வயிற்றில் உள்ள சகல நோய்களும் தீரும்"15 

"மண்கலந்த தண்ணீர் பசியைத் தாங்கும் சக்தியும் தெம்பும் தரும்" 16

"கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுக்கு பச்சிலை பூசலாம்"17

"நாடி பார்த்தே நோய்களின் அறிகுறியையும் நோயையும் உணர்வது"18

"பிறந்த குழந்தைக்கு மருந்தாக தாய் "சேனை" வைப்பது"19


ஆய்வு முடிவுரை

கி.ரா. வின் புதினங்களை ஆழ்ந்து பார்த்தோமானால் அவற்றினுள் எல்லா நிலைகளிலும் மேம்பட்டு நிற்பது கரிசல் பண்பாடே ஆகும். கரிசல் நிலப்பகுதி மக்களின் வாழ்க்கை, விவசாயம், சடங்குகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மருத்துவம், உணவு என அனைத்து கோணங்களிலும் புதினங்கள் சுட்டும் செய்திகள், கரிசல் பண்பாட்டை முழுமையாக வெளிக்கொண்டுவர முனைந்துள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது. கரிசல் எழுத்து என்பது அம்மக்களின் வாழ்க்கையையும், கரிசல் பண்பாடு என்பது அம்மக்களின் வாழ்வியலைக் கூறுவதாகவும் அமைந்து கரிசல் வாழ் மக்களின் பண்பாட்டை மிக அழகாக வெளிப்படுத்துகின்றது கி.ரா. வின் புதினங்கள்.

சான்றெண் விளக்கம்

1.        கி. ராஜநாராயணன், கரிசல் காட்டுக் கடுதாசி, ப.5

2.        மு.சுதந்திரமுத்து, கி. ராஜநாராயணனின் சிறுகதைத்திறன், ப.36

3.        க. பஞ்சாங்கம். மறுவாசிப்பில் கி.ரா. ப.166

4.        கி.ரா. கோபல்ல கிராமம், ப.56

5.        மேலது. ப.19

6.        மேலது. ப.56

7.        மேலது., ப.57

8.        மேலது. ப.57

9.        மேலது. ப.150

10.     கி.ரா. அந்தமான் நாயக்கர், ப.45

11.     கி.ரா. கோபல்ல கிராமம், ப.58

12.     கி.ரா. கோபல்லபுரத்து மக்கள், பக்.17-18

13.     கி.ரா. கோபல்ல கிராமம், ப.89

14.     மேலது. ப.147

15.     மேலது. ப.91

16.     மேலது. ப.91

17.     மேலது. ப.111

18.     மேலது. ப.120

19.     கி.ரா. அந்தமான் நாயக்கர், ப.91

துணைநூற்பட்டியல்

1.    ராஜநாராயணன், கி. (1995). கரிசல் காட்டுக் கடுதாசி, சிவகங்கை: அன்னம் (பி) பதிப்பகம்.

2.    ராஜநாராயணன், கி. (1993). கோபல்ல கிராமம், சிவகங்கை: செல்மா பதிப்பகம்.

3.    ராஜநாராயணன், கி. (1993). கோபல்லபுரத்து மக்கள், சிவகங்கை: செல்மா பதிப்பகம்.

4.    ராஜநாராயணன், கி. (1995). அந்தமான் நாயக்கர், சிவகங்கை: அன்னம் (பி) பதிப்பகம்.

5.    பஞ்சாங்கம், கி. (1996). மறுவாசிப்பில் கி.ரா, சிவகங்கை: அன்னம் (பி) பதிப்பகம்.