Search This Blog

Wednesday, December 12, 2012

மென்பொருள் துறையில் பணிசெய்யும் மாப்பிள்ளையைத் தேடும் பெண்களுக்கு…! (நகைச்சுவை)

மென்பொருள் துறையில் பணிசெய்யும் மாப்பிள்ளையைத் தேடும் பெண்களுக்கு…!



இராணி: என்னடி திடீர்னு ரொம்ப நாள்கழிச்சு பேசிருக்க என்ன விசயம்?

வாணி: வீட்ல மாப்பிள்ளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல பதிவு பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை தேர்வு பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.

இராணி: இதில் என்ன குழப்பம்?

வாணி: நிறைய பொறியாளர்கள் சாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் மென்பொருள் துறையில இருப்பவங்க வேற துறைல இருக்கற பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை தேர்வு பண்றதுனு தெரியல. நீதான் அதே துறைல இருக்கியே . எனக்கு கொஞ்சம் யோசனை சொல்லு.

இராணி: சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன வேலைனு சொல்லு.

வாணி: முதல் மாப்பிள்ளை திட்ட மேலாளர் (Project Manager) இருக்காரு.

இராணி: மேலாளரா? அப்படினா எப்பவுமே எதோ வேலையா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது இராத்திரி பகலா உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா இராத்திரி வண்டி (CAB) ஏற்பாடு பண்றேனு சொல்லுவாரு. டேய் இராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வாணி: ஆகா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப வேண்டாம். அடுத்து இருக்கறவரு சோதனையாளர் (Test Engg).

இராணி: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் சரியா சொல்லுவாரு. நீ பத்து வகை சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன்
வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வாணி: அப்ப இவருக்கும்போ போசொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு செயல்திறன் சோதனையாளர் (Performance Test Engg).

இராணி: இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட்டா, காபி நல்லா இருக்கானு பார்க்கமாட்டாரு. 5 நிமிசத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிச மா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது வேற, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

வாணி:  அப்ப பொறியாளர் வேண்டாம்னு சொல்றியா?


இராணி: யார் அப்படி சொன்னா? அதுல இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் உருவாக்குபவர்(Developer) கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வாணி: அவுங்களை பத்தி சொல்லேன்.

இராணி: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்மஅறிவாளிபடம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் .கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டுநீ ரொம்ப நல்லவனுசொல்லனும். அவ்வளவு தான்.

வாணி: இது அருமையா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்.




தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.


தமிழ் இனி மெல்லச் சாகாது!...

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு மொழி தன் மீது திணிக்கப்பட்ட சமூக, அரசியல் மற்றும் இயற்கை சார்ந்த அத்தனை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து இன்னும் உயிர்ப்போடு இருப்பது நமது தமிழ் மொழி மட்டும் தான். ஏனென்றால் உலக மொழிகளில் பல காலவெள்ளத்தில் கரைந்து போய் விட்டதாகக் கேட்டிருக்கிறோம்... தொன்மையான மொழிகள் பல சமுதாய மாற்றங்களினால் சிதைந்து போய் விட்டதைப் பார்த்திருக்கிறோம்.. தமிழுக்கு இணையான தொன்மையுடையதாய்க் கருதப்படும் சமஸ்கிருதம் கூட இன்று பெரும்பாலும் எழுத்தளவில் மட்டுமே உயிர் வாழ்கிறது.

ஆனால்,

தமிழ் அப்படி அல்ல,

ஆங்கிலம் போன்ற பிற மொழிகளைப் போல தொடர்ந்து புதுப்பிக்கப் படாமல் (continuously updated ) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் உயிர்ப்புடன் இருந்து வருகிறது என்றால் அது தன் இளமைப் பருவத்திலேயே எவ்வளவு செம்மைப்படுத்தப்பட்ட மொழியாக இருந்திருக்கிறது என்பது புலப்படும்.

கால மாற்றத்தின் படி யாழ் மற்றும் இன்னிசை எல்லாம் இன்றைய விஞ்ஞான உலகில் மென்பொருளிலும் டிஜிட்டல் மயமாகவும் மாறி வருகின்றது...

அதற்கு ஒரு நல்ல உதாரணம் ...

பாடப் புத்தகங்களால் செய்ய முடியாதவற்றை திரைப்படப் பாடல்கள் சில சமயங்களில் செய்து விடுகின்றன. "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்" என்ற திருவாசகமும் "வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து" என்ற ஆண்டாள் திருவாய்மொழியும் திரையிசை இல்லாவிட்டால் இளைஞர்களின் வாயில் நுழைந்திருக்குமா என்பது சந்தேகமே.

யார் இருந்தாலும் இல்லை என்றாலும் தமிழ் என்றும் அதன் சிறப்பையும், புகழையும் இழக்காமல் என்றும் தரணி எங்கும் தழைத்தோங்கி வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டு தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்...

இயன்ற வரை எல்லோருமிணைந்து
தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....

தூய தமிழ் பேணப் புறப்பட்டால்
தமிழ் இனி மெல்லச் சாகாது!
தனித் தூய தமிழ்
நீடூழி வாழும்!

அதே நேரத்தில் ... உங்கள் கூற்றை முழுவதுமாக மறுப்பதற்கு இல்லை...

ஆதலால்... 

"தமிழ்" இனி வாழ்வதற்கு நாம் தமிழ் மீதான ஈடுபாட்டை குழந்தைப் பருவத்தில் இருந்தே விதைக்க வேண்டும். குழந்தை திருக்குறள் ஒப்புவித்தால் "இதெல்லாம் அப்புறம் இருக்கட்டும், முதலில் ரைம்ஸ் சொல்லு" என்று சொல்லும் மனோபாவத்தை நாம் விட வேண்டும். உண்மை என்னவென்றால் இன்று தமிழ் நாட்டில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் பேருந்துகளில் தமிழில் எழுதியிருக்கும் வழித்தடங்களைக் கூட படிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். வெளி மாளிலம் ஒன்றுக்கு செல்லும் போது அந்த மொழியைப் படிக்க முடியவில்லை என்றால் நியாயம். நம் மாநிலத்தில் நம் மொழியையே படிக்க முடியவில்லை என்றால்?


பிள்ளைகளை தமிழ் புத்தகங்கள் , செய்தித்தாள்கள்(ளையும்) படிக்கும் படி பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். என்ன தான் சில தமிழ் நாளிதழ்கள் நாங்கள் தான் விற்பனையில் முதலிடம் என்று கூவினாலும் இளைஞர்களில் பெரும்பாலானோர் இன்று தமிழ்ப் பத்திரிக்கைகளைப் படிப்பதை கொஞ்சம் தரக்குறைவாக நினைக்கிறார்கள். இது ஏன்? தமிழ் நாட்டுக்குள்ளேயே நடக்கும் நிகழ்ச்சிகளையே கூட "Tamilnadu education minister inagurated Tamil sangam " என்று ஆங்கிலத்தில் படிக்கும் நிலைமையே இருக்கிறது

பள்ளிகளில் மிகக் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தமிழாசிரியர்களுக்கு தான். ஏனென்றால் மறுபடியும் 'utilitarianism '.. இயற்பியல் படித்தால் பொறியாளராகலாம். ஆங்கிலம் படித்தால் உலகின் எந்த மூலைக்கும் சென்று வரலாம். உயிரியல் படித்தால் மருத்துவராகலாம். தமிழ் படித்தால் ? கிரிக்கெட் போட்டி ஒன்று வைத்தால் வகுப்பில் பாதி மாணவர்கள் உடனே பெயரைப் பதிவு செய்கிறார்கள். "கவிதைப் போட்டி" வைத்தால் , ஒரு மாணவன் பதிவு செய்தாலே பெரிய விஷயம். அதுவும் அந்த மாணவன் ஒரு 'stand out ' போல நடத்தப்படுவதும் வேதனை...

தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் வரவேற்பு குறைவாக இருப்பதாக சொல்லப்படும் ஒரு வாதம். பாரதி காலத்தில் இருந்தே இது தொடர்வதாகத்தான் தெரிகிறது. தாகூரின் எழுத்துகளுக்கு நிகராக, ஏன் ஒரு படி மேலேயே சென்று நோபல் பரிசு பெரும் தரம் பாரதியின் எழுத்துகளுக்கு இருந்தாலும் அவரது காலத்தில் அவர் கவனிப்பாரற்று தான் இருந்தார். இன்றும் தமிழ் நாட்டில் ஒரு திரைப்பட நடிகருக்கு, ஒரு அரசியல்வாதிக்கு கிடைக்கும் வரவேற்பு தமிழ் எழுத்தாளர் ஒருவருக்குக் கிடைக்கிறதா என்றால் இல்லை. நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் தரத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் பாடலாசிரியர்கள் ஒரு லட்சம் கேட்டால் 'அவ்வளவா' என்று கேட்கிறார்களாம்... 




தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.

இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டி சுவாமி விவேகானந்தர் ...

இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டி சுவாமி விவேகானந்தர் ...


நாட்டுக்கு இன்றைய இளைய தலைமுறையினர் ஆற்ற வேண்டிய நற்பணிகள் குறித்து இளைஞர்கள் கூடி சிந்திக்க வேண்டும் . அவரது தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலை இளைய தலைமுறை பின்பற்றினால் இந்தியா வல்லரசாகும்..

இனி... 


விவேகானந்தர் வாழ்வு, அவரது பணி, அறிவுரைகள் பற்றி பார்ப்போம்....

விவேகானந்தர் யார்?

கொல்கட்டாவில் வக்கீல் விசுவநாத் தத்தர்-புனவேஸ்வரி அம்மையார் தம்பதியருக்கு 1863 ஜன., 12ல் விவேகானந்தர் பிறந்தார். நரேந்திரநாதர் என்பது இளமை பருவ பெயர். அளவு கடந்த உடல், அறிவு மற்றும் மனச்சக்தி மிக்கவர். குழந்தை பருவத்திலேயே ஈகை குணமும், தலைமை பண்பும் கொண்டிருந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம், ""நீங்கள் இறைவனை பார்த்திருக்கிறீர்களா? நான் பார்க்க முடியுமா?'' என கேள்வி எழுப்பினார் நரேந்திரநாதர். ""இறைவனை நானும் கண்டுள்ளேன். உனக்கும் காட்டுவேன்'' என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். ஆறாண்டுகள் அவரிடம் பயின்ற நரேனிடம், ""மக்கள் சேவையே மகேசன் சேவை'' என ராமகிருஷ்ணர் உபதேசித்தார். 1886ல் ராமகிருஷ்ணர் உடலை நீத்தபின், ஆறு ஆண்டுகள் பாரத நாட்டை சுற்றி வந்தார் நரேன். மன்னர்களுடன் பேசி, மக்களுக்கு தொண்டு செய்யுங்கள் என வற்புறுத்தினார்.1892ல் டிச., 25, 26, 27 தேதிகளில் குமரியில் பாறையில் அமர்ந்து தவம் செய்தார்.அவர் கண்டது என்ன? விவேகானந்தருக்கு பாரத ரிஷி முனிவர்களும் காட்சி தந்தனர். இப்படைப்பு முழுவதும் பரம்பொருள் மயம். பரம்பொருள் ஒன்று. அதன் பெயர்கள் பல. அதை அடையும் வழிகள் பல. மனிதனுள் தெய்வ சக்தி இருக்கிறது. இதுவே பாரதம் கண்ட ஆன்மிக நெறி. யமன் நசிகேதனை தட்டி எழுப்பி, எழுமின் விழிமின் என உசுப்பியதை போல, பாரத மக்களை விழிப்புற செய்வதே தன் கடமை என்று உணர்ந்தார் நரேந்திரர். சிகாகோவில் 1893ல் நடந்த சர்வமத மாநாட்டுக்கு அவர் செல்ல வேண்டும் என ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியும், ராஜஸ்தான் கேத்ரி மன்னர் அஜித் சிங்கும் வற்புறுத்தினர். கேத்ரி மன்னர், அவருக்கு சுவாமி விவேகானந்தர் என்ற பெயரையும் சூட்டினார்.1893ல் மே மாதம் மும்பையில் இருந்து புறப்பட்டு சிகாகோ சென்றார் விவேகானந்தர். அங்கு 1893 செப்., 11ல் துவங்கிய சர்வமத மாநாட்டில், ""சகோதர, சகோதரிகளே'' என துவங்கி அவர் ஆற்றிய உரை, அனைத்து மக்களையும் ஆரவாரிக்க செய்தது.

பாரதத்தை பாம்பாட்டிகளின் நாடு என நினைத்து கொண்டிருந்த மேற்கு நாட்டவர், சிலருக்கு விவேகானந்தர் உரைகள் வியப்பூட்டின. மூன்றரை ஆண்டுகள் 1897 ஜனவரி வரை, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற தேசங்களில் பயணம் செய்து அறவுரைகள் ஆற்றினார் விவேகானந்தர். குட்வின் என்ற ஆங்கில சுருக்கெழுத்தாளர், விவேகானந்தரின் அறஉரைகளை, எழுச்சி உரைகளை எழுதி வைத்து, மனித குலத்திற்கு பெரும் தொண்டாற்றினார். பல மேலை நாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் விவேகானந்தரின் சீடராகி, அவர் பணி தொடர வழிவகுத்தனர். மார்க்கெரட் நோபல் என்ற ஐரிஷ் பெண்மணி, அவரது மாணவியாகி சகோதரி நிவேதிதை என பெயர் சூட்டப்பட்டு, பாரதம் வந்து, தன் கடைசி மூச்சு வரை தொண்டு புரிந்தார்.விவேகானந்தர் 1897 ஜனவரியில் இலங்கை வழியாக தாயகம் திரும்பினார். பானகர சேதுபதி ஆண்ட ராமநாதபுரம் சமஸ்தானத்தில் முதலடி எடுத்து வைக்க வேண்டும் என விவேகானந்தர் விரும்பினார்.

1897 ஜன., 26 ராமநாதபுரம் அருகே குந்துகாலில் விவேகானந்தர் கப்பலில் வந்து இறங்கினார். பாஸ்கர சேதுபதி தலைமையில் மக்கள் அவரை வரவேற்றனர். விவேகானந்தர் ஏறி வந்த சாரட்டு வண்டியின் குதிரைகளை அவிழ்த்து விட்டு தானே அதை இழுத்து மரியாதை செலுத்தினார். ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, குடந்தை வழியாக சென்னைக்கு ரயிலில் சென்றார் விவேகானந்தர். பாரதத்தின் எதிர்காலம், அதன் கடந்த காலத்தை விடஒளிமயமாக இருக்கும் என பேசினார். சென்னையில் இன்று விவேகானந்தர் இல்லம் என்று புகழ்பெற்ற, ஐஸ் ஹவுஸில் ஒன்பது நாட்கள் தங்கி வீர உரைகளை அவர் ஆற்றினார். 1897பிப்., கொல்கட்டா புறப்பட்டார். அவரது உரைகள், "இந்திய பிரசங்கங்கள்' என பெயரில் புகழ்பெற்றன. 1897ல் தொண்டும் துறவும் என்ற மைய சிந்தனையுடன், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் என்ற ஆன்மிக தொண்டு நிறுவனம், சுவாமி விவேகானந்தரால் துவங்கப்பட்டது.

பஞ்சம், பிளேக் நேரத்தில் நிவாரண பணிகளையும் ஆற்றினார் விவேகானந்தர். இறுதி மூச்சு வரை தெய்வ பணி, மனித நேய பணி செய்து, 1902 ஜூலை 4ல் உடலை விட்டு சென்றார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது உபதேசங்களை படித்து, தேச விடுதலை பணியில் ஈடுபடுகின்றனர். கல்வி, மருத்துவம், நிவாரண பணி மூலம் இறை வழிபாடு, தொண்டு மூலம் தேசபக்தி, தேசத்தை மறுமலர்ச்சி பெற செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

நற்பணி செய்யும் விவேகானந்த கேந்திரம் :

சுவாமி விவேகானந்தர் தவம் செய்த புனித பாறை கன்னியாகுமரியின் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் உள்ளது. அதை விவேகானந்தர் பாறை என்றே அழைக்கின்றனர். 1963ல் ஏக்நாத் ரானடே என்பவர், நன்கொடை பெற்று, காரைக்குடி எஸ்.கே.ஆச்சாரி தலைமையில் இந்த நினைவுச் சின்னத்திற்கான பணி நடந்தது. 1970ல் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் தலைவர், ஜனாதிபதி நினைவுச் சின்னத்தை தேசத்திற்கு அர்ப்பணித்தனர். சுவாமி விவேகானந்திற்கு உண்மையான நினைவுச் சின்னம் எதுவாக இருக்க முடியும்? அவரின் அறவுரைகளை நெஞ்சில் நிறுத்தி, மக்கள் பணிசெய்வதே அது. எனவே ஏக்நாத் ரானடே விவேகானந்த கேந்திரம் அமைப்பை நிறுவினார். அது கன்னியாகுமரியை தலைநகராகக் கொண்டு நாடு முழுவதும் நற்பணி செய்கிறது. பட்டதாரி இளைஞர்கள் ஆயுள்கால தொண்டர்களாக சேர்த்து செயல்படுகின்றனர்.

அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், அந்தமானில் 57 பள்ளிகளை நடத்துகிறது. மருத்துவமனைகள், கிராம முன்னேற்ற திட்டங்கள், இயற்கை வளஅபிவிருத்தி திட்டம், அஸ்ஸாமில் பண்பாட்டு வளர்ச்சி மையம், டில்லியில் பன்னாட்டு விவேகானந்த பவுண்டேஷன், கேரளா, கொடுங்கல்லூரில் வேத தரிசன மையம், காஷ்மீரில் ஒரு மையம், தமிழகம், மகாராஷ்டிரா, ஒடிசா,அசாம், அருணாச்சல மாநிலங்களில் கிராம முன்னேற்ற பணிகள் நடக்கின்றன. நம் பண்பாட்டை மையமாக கொண்ட வளர்ச்சி என்பதே விவேகானந்த கேந்திரத்தின் முக்கியப் பணி. இதன் 210 கிளைகள் இந்தியாவின் 18 மாநிலங்களில் பணியாற்றுகின்றன. இளையோர் நன்னூல் விவாதக்குழு, யோகா வகுப்பு, பஜனை வகுப்பு நடத்தப்படுகிறது. நன்னூல் விற்பனையும் கேந்திரத்தின் பணிகளில் ஒன்று. கேந்திர பத்திரிகை, யுவபாரதி ஆங்கில இதழ்கள், விவேகவாணி தமிழ் இதழ், சென்னை வெளியீடு, மராத்தி, குஜராத்தி, இந்தி, அஸ்ஸாம், மலையாள பத்திரிகைகள் வெளியாகின்றன. இப்பணிகள் பொதுமக்களின் பொருளாதார ஆதரவுடன் நடக்கின்றன.

தமிழகத்தில் விவேகானந்த கேந்திரம்:

கன்னியாகுமரி விவேகானந்தபுர வளாகத்தில் உள்ள பயிற்சி மையம், ஆயுட்கால, முழுநேர தொண்டர்கள், பல்திறன் படைத்த செயல்வீரர்கள், சமூக தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. அலையும் துறவி, சுவாமி விவேகானந்தர், ஏக்நாத்ஜி வாழ்க்கை வரலாறு, கிராமோதயம் பற்றிய கண்காட்சிகள் உண்டு. விடுதி வசதிகள், உணவுக் கூடம், மருத்துவமனை, வங்கி, அரங்கங்கள் தலைமையகத்தில் உள்ளன. ஆண்டுக்கு எட்டு முறை உடனுறை யோகப்பயிற்சி முகாம்கள் நடக்கிறது. சென்னை, மதுரை, கோவை பகுதிகளில் கிளை மையங்கள் உள்ளன. குறைந்த விலை வீடுகட்டுதல், தண்ணீர் சேமிப்பு, பயோகாஸ், சமையலறை கழிவு எரிவாயு உற்பத்தி, நீலப்பச்சை பாசி மூலம் பால்வளம் பெருக்குதல், ஆளுமை வளர்ச்சி முகாம்கள் இத்துறையின் சிறப்பு பணிகள். இதற்கு உலகத்தர அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் விவேகானந்த கேந்திரத்தின் கிராம முன்னேற்ற திட்டம் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் செயல்படுகிறது. சத்துணவு, பாலர் பள்ளிகள், மருந்தகங்கள், முதியோரை தத்தெடுத்தல், கண்முகாம்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் திருவிளக்குப் பூஜைகள், நூற்றுக் கணக்கில் கல்லூரி, பள்ளிகள் கலந்து கொள்ளும் பண்பாட்டு பயிற்சியும் இத்துறையின் பணிகள் .

விவேகானந்தர் பற்றி இவர்கள் :

ராஜாஜி : விவேகானந்தர் இந்து மதத்தை காப்பாற்றினார். அவர் இல்லாவிட்டால் நாம் நமது மதத்தை இழந்திருப்போம். சுதந்திரத்தை பெற்றிருக்க மாட்டோம். ஆகையால் நாம் சுவாமி விவேகானந்தருக்கு ஒவ்வொரு வகையிலும் கடமைப்பட்டிருக்கிறோம்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை : ஒருநூறு வருடங்கள் முன்னமே - செல்லஅமெரிக்கா சிகாகோ தன்னிலேநம்பெரும் இந்திய நாட்டவர் - கண்டஞானப் பெருமையைக் காட்டினான்.சத்திய வாழ்க்கையைப் பேசினான் - அருள்சாந்த தவக்கனல் வீசினான்யுத்தக் கொடுமையைச் சிந்திப்போம் - அந்தஉத்தமன் சொன்னதை வந்திப்போம்.

சுவாமி விபுலானந்தர் : "சீர்மருவு காசினியில் ஞானவொளி பரப்பத்தேயத்துட் பாரதமே சிறந்ததென விசைப்பஈரிருபா னாண்டுறைந்தா யெமதுதவக் குறையோஇளவயதி லெமைவிடுத்தா யளவிலருட் கடலே!.'

சுவாமி சித்பவானந்தர் : மானுடப் பிறவியின் முக்கிய நோக்கம் பரமனை அடைதல் என்னும் உயர்ந்த செய்தியை உலகிற்கு விவேகானந்தர் வழங்கினார். சண்முகனிடத்திருக்கின்ற ஷட் ஆதாரங்கள், ஷட் மகிமைகள், ஷட்தர்சனங்கள் இக்காலத்திற்கு ஏற்றவாறு விவேகானந்தர் வாயிலாக வெளியாகியிருக்கின்றன. அதனால் விவேகானந்தரை வேலவனது வரப்பிரசாதம் என மொழிவது முற்றிலும் பொருந்தும்.

பாரதியார் : 1893ம் ஆண்டில் விவேகானந்தர் யாரோ ஒரு சாதாரண சன்னியாசியாக வந்து தென்மாநிலங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய மகிமையை கண்டுபிடித்து, நாட்டிற்கெல்லாம் பெருமை தேடித் தந்தவர் அழகிய சிங்கப் பெருமாளே. இவருடைய முயற்சிகளாலே விவேகானந்தர் அமெரிக்காவுக்கு போய், ஆரிய தர்மத்தை அந்நாட்டில் பிரகாசப்படுத்தும்படி ஏற்பட்டது.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை : சீர்பெருகு வங்கநிலம் சிறக்க வந்தோன்,ஸ்ரீராம கிருஷ்ணபதம் சிரமேற் கொண்டோன்;பார்புகழும் வேதாந்தப் பயிர்வ ளர்த்தோன்,  பாரதத்தின் பெருமையெங்கும் பரவச் செய்தோன்;வேர் பறிய எதிர்வாதம் விரித்துக் கூறிதார்புனைந்த தவயோகி விவேகா னந்தன்தாள்பணிந்து வாழ்வோமித் தரணி மீதே!.

குன்றக்குடி அடிகள் : வீறு புகழார் விவேகானந்தர்இமயம் போன்ற எழிலார் தோற்றமும்ஞானப் பேரொளி தவழ்திரு முகமும்தண்ணரு ளார்ந்த நெஞ்சமும், மன்னுயிர்மனத்திருள் போக்கும் ஞானச் செஞ்சொலும்பிணத்தையும் பேச வைத்தன; உயிர்களின்சோர்வினை யகற்றிச் சுறுசுறுப்பினைத்தந்தன; இதயத் தாமரை விரித்தன;சுதந்திரத்தின் சுவையை யூட்டின;ஞான மும்பர மோனமும் நல்கின;

முதல்வர் கருணாநிதி : ஒரு காலத்தில் சொல்லப்பட்டு, இடையிலே மறைந்து விட்ட "சத்தியமேவ ஜயதே' வாய்மையே வெல்லும் என்கிற இந்த வாசகத்தை முதல் முதல் மறுமுறை ஞாபகத்திற்கு கொண்டு வந்தவர், பாஸ்கர சேதுபதி மன்னர் என்றால் அது மிகையாகாது. அதற்கு காரணமாக இருந்தவர் விவேகானந்தர்.

கி.வா.ஜகன்னாதன் : விவேகானந்தரின் உபதேசங்களில் வீணையின் மெல்லிசை இல்லை. வீரமுரசே ஒலிக்கிறது. வில்லின் நாண் ஒலியைக் கேட்கிறோம். தூங்குகிறவர்களை எழுப்ப வந்தவர் அவர். பழைய உபநிடதங்களுக்குப் புதிய மெருகிட்டவர் அவர். பழைய முனிவர்களின் வழியைப் புதிய முறையில் எடுத்துக் காட்டியவர் அவர். அவரால் உலகமே இந்து மதத்தின் பெருமையை உணர்ந்தது.

ப.ஜீவானந்தம் : பாருலகை குலுக்கிய பாரதத் துறவி. துறவிகளிலும் தனக்கு நிகர் தானேயான அரசியல் துறவி. பாரத மணித்திருநாடே தான் என உருவகித்து வாழ்ந்த பரிபூரண தேசபக்தத் துறவி. நவீன இந்தியாவின் ஞானாசிரியர். பாரதீய ஆன்மிக ஞானமும் மேற்கத்திய விஞ்ஞானமும் சேம்மானம் பிசகாது கலந்து உறவாடி ஒளிவிட்ட கூட்டு மேதை.

சுப்பிரமணிய சிவம் : விவேகானந்தரை நினைக்கும் நேரமெல்லாம் எனக்கு புதிதுபுதிதாக ஊக்கமும், உற்சாகமும் உண்டாகிறது. எங்கிருந்தோ எனக்கு தெரியாமல் ஒரு சக்தியை அடைகிறேன். அறிவுப் பாலூட்டும் அன்னையாய், கொள்கைகளுக்கெல்லாம் ஆதாரமாய் என் புறத்தே நின்று கொண்டு, ஜீவிதத்துக்கொரு தூண்டுகோலாய் உள்ளது. அவருடைய சக்தி இருந்து வருகிறாரென்று திடமானதொரு எண்ணம் என் மனதில் பதிந்து கிடக்கிறது.

கவியோகி சுத்தானந்த பாரதியார் : பணியாலும் நினைப்பாலுந் தவத்தாலுங் குருவினிடம் பயின்ற ஞானம்அணியாக நிலவுலகிற் கருளாளுந் துணைவர்தமை யருகு சேர்த்தேதுணிவாகப் பயிற்றுவித்துத் துறவாகச் சுற்றுவழிதுன்னிச் சென்னைதனியாக, அறிவோர்கள் அனுப்பிடவே சம்வமதச்சங்கஞ் சென்றான்.

சவுந்தர கைலாசம் : வயிறதே உணவில் லாமல்வாடிடும் போது ஞானப்பயிரதோ வேர்பி டிக்கும்?பசியிலே வெற்று வாகும்உயிரது தழைக்க எண்ணிஉழைத்திடு முதலில்; தானேதுயரறும் எனவு ரைத்ததுறவிதாள் போற்றி! போற்றி! 

 

 

தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.

 

உலக மொழி அனைத்துக்கும் தமிழ் மொழியே ஆரம்பம்...

உலக மொழி அனைத்துக்கும்
தமிழ் மொழியே ஆரம்பம்;


எழுத்துக்கு 'அ'கரம் முதல்
திருக்குறளே ஆதாரம்!


தப்பில்லா இலக்கணத்தில்
தரமான இலக்கியங்கள்;
இயல் இசை நாடகமாய்
முத்தமிழில் முழக்கமிடும்!


அளவுக்கும் அதிகம் உண்டால்
அமிர்தம் கூட விஷமாகும்;
அமுத மொழி தமிழ் மட்டும்
எப்பொழுதும் தித்திக்கும்!


தெய்வ மொழி தமிழுக்கு
தெய்வம் எங்கள் முருகன்;
முருகனென்றால் அழகனென்று
மணக்கும் தமிழ் சொல்லும்!


தமிழுக்கு இணை இங்கே
வேறு மொழி உண்டோ?
பாரதியும் இதை அன்றே
பாடிவிட்டு சென்றான்!


ஆன்மிக அன்பர்களை
அணைத்திழுக்கும் நூல்கள்:
ஆழ்வார்கள் பிரபந்தம்;
திருத்தொண்டர் புராணம்;


திருமந்திரம், திருவருட்பா,
திருவாசகம், தேவாரம்,
திருமுறைகள் பலவும்
தெய்வ மணம் காட்டும்!


கல் தோன்றி மண் தோன்றா
முன் தோன்றி மூத்தத் தமிழ்,
முதுமை என்றும் அடைவதில்லை;
முடிவு மட்டும் அதற்கில்லை!


அறிவியலும், விஞ்ஞானப்
பொறியியலும் தமிழில்,
அகிலமெல்லாம் சுற்றிவரப்
பெருமை கொள்வாய் தமிழா!


“சாகையிலும் தமிழ் படித்தே சாக வேண்டும்
சாம்பலிலும் தமிழ் மணந்தே வேக வேண்டும்”

-பாரதிதாசன். 

 

 

 

தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.

 

 

 

Saturday, December 8, 2012

தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள் - 1

புறநானூற்றுப் பாடல் ஒன்று. காலையில் பாலில் அரிசிப் பொரியைச் சேர்த்து உண்பதாகக் குறிப்பிடுகிறது. இன்று பிரிட்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் மக்கள் காலை உணவில் "கார்ன் ப்ளேக்ஸ்" (மக்காச் சோளம்), "ரைஸ் கிரிஸ்பிஸ்" (அரிசிப் பொறி) ஆகியவற்றைச் சாப்பிடுவதைக் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் கண்டு பிடித்த காலைத் தானிய உணவு (breakfast cereal) உலகெங்கிலும் பரவியதெப்படி? இதுவும் ஆராய்ச்சிக்குரிய பொருள்!

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் ஒரு அதிசயச் செய்தி வருகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ இயற்றிய பாடலில், ஒரு மரத்தின் கீழ் பொய் சொல்பவன் நின்றால் அந்த மரம் வாடி விடும் என்று கூறுகிறார். தற்காலத்தில் அமெரிக்காவில் பொய் கண்டு பிடிக்கும் கருவியைப் (Lie detector) பயன்படுத்துகின்றனர். பொய் சொல்பவனின் நாடி, இருதயம், மூளை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிட்டு அவன் பொய்யன் என்பதைக் கண்டு பிடிக்கின்றனர். ஆனால் தமிழனோ இதற்கு ஒரு படி மேலாகச் சென்று ஒரு தாவரம் கூடப் பொய்யைக் கண்டு பிடிக்க உதவும் என்கிறான். ஆனால் அத்தகைய மரம் எது என்று தெரியவில்லை. வள்ளுவர் கூட "மோப்பக் குழையும் அனிச்சம் என்று அனிச்சம் பூ பற்றிக் கூறுகிறார். அதாவது முகர்ந்து பார்த்தாலேயே வாடி விடுமாம் அனிச்சம். தாவரங்களுக்கும் உயிருண்டு, உணர்ச்சியுண்டு என்பதை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு பிடித்தவன் தமிழன், இன்னொரு சங்கப் பாடலில் ஒரு செடியை நெய்யும் பாலும் ஊற்றி, பெற்ற மகளைப் போல அன்பாக வளர்த்த ஒரு பெண் பற்றி ஒரு கவிஞன் பாடுகிறான்.

விண் வெளியில் ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவைகளில் பூமியைப் போலக் காற்று மண்டலம் இருந்தால் தான் உயிரினங்கள் வாழ முடியும். பூமிக்கு மேலே - விண் வெளியில் - வளி (காற்று) மண்டலம் இல்லை. இதைப் பழந் தமிழர் அறிந்திருந்தனர் போலும்! வெள்ளக்குடி நாகனார் என்ற புறநானூற்றுப் புலவர் (புறம் 35) "வளியிட வழங்கா வானம்" என்று குறிப்பிடுகிறார். குறுங்கோழியூர்க் கிழார் (புறம் 20) "வறி நிலை இல் காயம்" என்றும் புலவர் மார்க்கண்டேயனார் (புறம் 365) "வளியிட வழங்கா வழக்கு அரு நீத்தம்" என்றும் வள்ளுவன் (குறள் 245) "வளி வழங்கு பூமி" என்றும் இதையே குறிப்பிடுகின்றனர்.

ஒலியும் ஒளியும் (Sound and light) மின் காந்தப் பட்டையின் (Electro Magnetic spectrum) ஒரே அங்கம் என்று தற்கால அறிவியல் கூறுகிறது. இதை அறிந்து தானோ என்னவோ தமிழ் மொழியில் மட்டும் ஒலி - ஒளி என்று ஏறத்தாழ ஒரே சப்தமுள்ள இரண்டு சொற்கள் இதைக் குறிக்கப் பயன் படுத்தப் படுகின்றன. சமஸ்கிருதம், ஆங்கிலம் உட்பட எல்லா மொழிகளிலும் இதற்கு வெவ்வேறு சப்தமுள்ள சொற்கள் உள்ளன.

தற்காலப் பறவையியல் அறிஞர்கள் பறவைகள் குடியேற்றம் (Bird migration) பற்றி விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். சில வகை பறவைகள் 12,000 மைல் பறந்து வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை சென்று திரும்புகின்றன. இதைக் கண்டு பிடிக்க நவீன உத்திகளைக் (Electronic Tagging or Ringing) கையாளுகின்றனர். பறவைகளின் காலில் தேதியும், ஊர்ப் பெயரும் பொறித்த ஒரு அலுமினிய வளையத்தையோ, மின்னணுக் கருவியையோ மாட்டி விடுவார்கள். வேறொரு நாட்டில் இத்தகைய பறவைகளைக் கண்டால் அந்த வளையத்திலுள்ள செய்திகளையும், அதைத் தாங்கள் பார்த்த தேதி, இடத்தின் பெயரையும் அந்த நாட்டுப் பறவையியல் அறிஞர்கள் உலக முழுவதுமுள்ள பறவையியல் ஆய்வுக் கூடங்களுக்கு அறிவிப்பார்கள். ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே தென் குமரியிலிருந்து வட இமயத்திற்கு அன்னப் பறவைகள் பறந்து செல்வதையும் இமய மலையிலிருந்து அவை தமிழ் நாட்டுக்கு வருவதையும் தமிழன் அறிந்து வந்துள்ளான். காலில் வளையம் மாட்டாமலும், மின்னணுக் கருவியைப் பயன் படுத்தாமலும் அன்னப் பறவையின் 3,000 மைல் பயணத்தை அறிந்து பாடியுள்ளான் தமிழன்.

(புறம் 67 - பிசிராந்தையார் நற்றிணை - 70 வெள்ளி வீதியார், நற்றிணை 356 - பாணர், அகம் 120 - நக்கீரனார், அகம் 273 - ஒளவையார் ஆகிய பாடல்களைக் காண்க).

பிராணிகளுக்கு அறிவு உண்டு என்றும் மனிதர்களைப் போலவே அவைகளுக்கு உணர்வுகள் உண்டு என்றும் தற்காலத்தில் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியாகி வருகின்றன. குரங்குகள் மனிதர்களைப் போலவே கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்று பிரபல வார இதழான "நியூஸ் வீக்"கில் அண்மைக் காலத்தில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டான் தமிழன். குரங்குகள் முரசு அடிப்பதை முட மோசியார் (புறம் 128) என்பவரும், குரங்குகள் குச்சிகளைப் பயன்படுத்துவதைக் கபிலர் என்பவரும் குறிப்பிடுகின்றனர். ஆடுகளைக் கொட்டகையில் அடைப்பதற்கு ஆட்டிடையர்கள் நாய்களைப் பயன் படுத்தும் காட்சியை பிபிசி டெலிவிஷனில் பலரும் பார்த்திருப்பீர்கள். தொலைவில் நின்றவாறே வாயின் மூலம் விசில் அடித்து ஆடுகளை அழைக்கும் காட்சியைக் கபிலர் (அகம் 318) பாடுகிறார். பாரியின் பறம்பு மலையை மூவேந்தரும் முற்றுகையிட்ட காலத்தில் கிளிகளின் மூலம் நெல் முதலிய தானியங்களைக் கொணர்ந்து பல மாதங்கள் உயிர் வாழ்ந்தனர் என்று (Survival techniques using animals at war times) ஒளவையாரும் (அகம் 303) நக்கீரரும் (அகம் 78) குறிப்பிடுகின்றனர். கிளிகளை இவ்வாறு பயன் படுத்தியவர் கபிலர் என்றும் கூறுகின்றனர்.

பருவக் காற்றின் பயனை ஹிப்பாலஸ் என்ற கிரேக்கர் தான் முதல் முதலில் கண்டு பிடித்தார் என்றும் இது கி.பி. முதல் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் கரிகால் பெரு வளத்தானைப் பாடிய வெண்ணிக் குயத்தியார் (புறம் 66) கரிகால் வளவனின் முன்னோர்கள் காற்றின் பயனை அறிந்து நாவாய் (கப்பல்) ஓட்டியதைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

நறி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உருவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ. (புறம் 66)

மாங்குடி மருதனும் (புறம் 26), மருதன் இளநகனும் (கலி 82), வளி வழங்கு கலம் (பாய் மரக் கப்பல்), பருவக் காற்று ஆகியன பற்றிப் பாடுகின்றனர்.



தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.