Search This Blog

Monday, October 29, 2012

பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை

 ஆசாரக்கோவை:-

ஆசாரக்கோவை, மக்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை விளக்கிக் கூறுகிறது. ஆசாரம் என்றால் நல்ல முறையில் நடத்தல் என்பது பொருள். பொதுவாகக் கடவுள் வழிபாடு செய்கிறவர்கள் தினம் நீராடித் தூய ஆடை உடுத்து நல்ல உணவு உட்கொண்டு வாழ்கின்றனர். அவர்களை ஆசாரத்தோடு வாழ்கின்றவர்கள் என்று கூறுகிறோம். காலப்போக்கில் கடவுள் வழிபாடு செய்து நல்ல நெறிகளைக் கடைப்பிடித்துப் புறத்தே தூய்மையாக உடையவர்கள் ஆசாரம் உடையவர்கள் என்றாகிவிட்டது. இது முற்றிலும் தவறானது. உள்ளும், புறமும் தூய்மை உடைமையே ஆசாரமாகும். இவ்விருவகை ஆசாரத்தைப் பற்றியும் கூறுவதுதான் ஆசாரக்கோவை.


1. ஆசாரக்கோவை :-

ஆசாரக்கோவை என்பதற்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருளாம். இந்த நூலினுள் ஆசார வித்து (1), ஆசாரம் எப்பெற்றியானும் படும் (96), ஆசாரம் வீடு பெற்றார் (100) என்று வரும் இடங்களில் ஆசாரம் என்ற சொல் ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. இந்த நூலுக்கு மூல நூல் ஆரிடம் என்ற வடமொழி நூலாகும்.

2. ஆசிரியர்:-

இந்த நூலை இயற்றியவர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார். வண்கயத்தூர் என்பது இவரது ஊர்ப் பெயர். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடியேத்தி என்ற (எயில் - மதில்; மூன்று மதில்களை அழித்தவன் சிவபெருமான்) சிறப்புப் பாயிர அடிகளால் இவர் சைவ சமயத்தவர் எனலாம். 

ஆசிரியருடைய காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பர்.

3.  நூலின் அமைப்பும் பாடுபொருளும்:-

இந்நூல் பாயிரம் நீங்கலாக நூறு வெண்பாக்களைக் கொண்டது. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா என வெண்பாவின் வகைகள் யாவும் இந்த நூலில் காணப்படுகின்றன. அடிப்படை ஒழுக்கங்களைத் தவிர நாள்தோறும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியவை இவை, தவிர்க்க வேண்டியவை இவை என்பதையும் இந்நூல் தெளிவாகக் கூறுகின்றது. பேரறிஞர்கள் தம் அனுபவத்தில் ஆராய்ந்து சொன்ன ஒழுக்க நெறிகள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருள்களும் இந்நூலுள் விரவி (கலந்து) நிற்பதைக் காணலாம். 

அன்றாட வாழ்க்கையில் நாம் காலையில் எழுந்திருக்கிறோம். நீராடுகிறோம்.உணவு உண்ணுகிறோம். அவரவர் வாழ்க்கைக்கும் இயல்புக்கும் தகுந்தாற்போல் அவரவர் விருப்பம்போல் காலையில் எழவும், குளிக்கவும் உண்ணவும் செய்கிறார்கள். இந்த அன்றாட வாழ்க்கை முறைகளில் கூட நாம் ஒரு நெறிப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை, பெருவாயின் முள்ளியார் இந்நூலில் சொல்கிறார்.

‘தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பது பழமொழி. இளம்பருவம் முதல் நல்ல பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டால் பின்னர் நற்பண்புகள் உருவாக வழிவகுக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்நூல் அமைந்துள்ளது. 

இன்னின்ன செய்யத் தக்கவை, இதனால் இன்ன நலம் உண்டாகும் என்பதும் இன்னின்ன செய்யத் தகாதன, அவற்றைச் செய்யின் இன்னின்ன கேடுகள் உண்டாகும் என்பதும் இந்நூலில் தெளிவாக விளக்கப்படுகின்றன.


4.1 பின்பற்ற வேண்டிய நெறிகள்:-

இது வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய சிறந்த வழிமுறைகளைக் குறிப்பிடுவது ஆகும். நல்லொழுக்கங்களுக்குக் காரணமான நற்குணங்கள், வணங்க வேண்டியவர்கள், அறம் செய்தல், ஏனைய உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை போன்றவற்றைப் பற்றிப் பெருவாயின் முள்ளியார் விவரிக்கின்றார்.

4.2  நற்பண்புகள்:-

ஆசாரக்கோவை முதற் பாடலிலே நல்லொழுக்கங்கட்கு வித்தாக, காரணமாக விளங்குவன எவை என்று வரையறை செய்து எட்டு நற்குணங்களைக் கூறுவதைக் காணலாம். நன்றியறிதல், பொறுமை, இன்சொல், எவருக்கும் இன்னாதன செய்யாமை, கல்வி, ஒப்புரவறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு சேர்தல் என்ற இந்த எட்டு வகைப் பண்புகளும் நல்லோரால் சொல்லப்பட்ட ஆசாரங்களுக்குக் காரணம் ஆகும் என்கிறார் ஆசிரியர். எல்லா நீதி நூல்களும் சொல்லக்கூடிய இந்த எட்டுப் பண்புகளையும் முதற்பாடலிலேயே குறிப்பிட்டுச் சொல்லி விடுகிறது, ஆசாரக்கோவை.

4.3 வணங்கத் தக்கவர்:-

பக்தியின் அடிப்படையில் அவரவர் விரும்பும் தெய்வத்தை வணங்குதல் நம்முடைய மனச் செருக்கை அடக்கும் ஒரு சிறந்த நெறியாகும். காலையில் எழுந்தவுடன் பல்துலக்கிச் சுத்தம் செய்து தாம் வணங்கும் தெய்வத்தைத் தாம் அறியும் நெறியால் வணங்குக என்கிறார். பெருவாயின் முள்ளியார் (ஆசாரக்கோவை - 9).

தம்மைவிடப் பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுவதே உயர்ந்த பண்பு. சிறு வயதிலிருந்தே அதைப் பழகிக்கொள்ள வேண்டாமா? அதனை ஒரு சிறந்த நெறியாகக் கூறுகிறது ஆசாரக்கோவை. அரசன், ஆசிரியர், தாய், தந்தை, நம்மைவிடப் பெரியவர் அனைவரையும் தொழுது வணங்க வேண்டும் என்பதே எல்லோரும் கண்ட நெறி என்கிறது.

அரசன் உபாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவரிவரைத்
தேவரைப் போலத் தொழுதெழுக என்பதே
யாவரும் கண்ட நெறி

(ஆசாரக்கோவை - 16)
(குரவர் = பெரியோர்)


4.5 அறம் செய்த
ல்:-

இயன்ற இடங்களில் எல்லாம் தம்மால் முடிந்தவரை அறம் செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர்,

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்

(குறள் :33)
என்று கூறுகிறார். திருமண நாளின் கண்ணும், தேவர்க்குரிய சிறப்பு நாளின் கண்ணும், முன்னோர்க்குச் சிறப்புச் செய்யும் நாளின் கண்ணும், விழா நாட்களிலும், யாகம் செய்யும் போதும் தானம் செய்வதுடன் விருந்தினர்க்குச் சோறிட வேண்டும் என்கிறது ஆசாரக்கோவை (48). தானத்தில் சிறந்தது அன்னதானம். போதும் போதும் என்று சொல்லும் வண்ணம் கொடுக்க முடிந்த தானம் இதுவே. ஆகவே அதை வலியுறுத்திக் கூறுவதைக் காணலாம்.

நல்லறிவுடையவர் நிறைஉவா (பௌர்ணமி) நாளில் மரங்களை வெட்ட மாட்டார்கள். பல் தேய்ப்பதற்குக் கூட மரத்திலிருந்து குச்சியை ஒடிக்க மாட்டார்கள். நிறைமதி நாளில் மரம், செடி, கொடி முதலிய உயிர்களுக்குக் கூட ஊறு செய்யலாகாது.

குரவர் உரையிகந்து செய்யார் விரதம்
குறையுடையார் தீர மறவார் - நிறையுவா
மெல்கோலும் தின்னார் மரம்குறையார் என்பதே
நல்லறி வாளர் துணிவு

(ஆசாரக்கோவை - 17)
(மெல்கோல் = பற்குச்சி, குறைத்தல் = வெட்டுதல், நிறையுவா = பௌர்ணமி நாள்)

என்ற பாடலில் இக்கருத்தை வலியுறுத்திப் பாடுவதைப் பாருங்கள்! 


4.6 கற்றுக் கொள்ள வேண்டிய நெறிகள்:-

நாம், நம் வாழ்க்கையில் முன்னேறுவதற்குப் பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நெறிகள் பல உள்ளன. நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களின் பழக்க வழக்கங்களிலிருந்து சிலவற்றைக் கற்று கொள்கிறோம், அதைப்போல நம் உடலைப் பாதுகாப்பதற்காக உண்ணும் உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதையும் பிறரிடமிருந்து தெரிந்து கொள்கின்றோம். இவை பற்றிய செய்திகளை ஆசாரக்கோவை எடுத்துரைக்கிறது.


4.7 இயற்கையிடமிருந்து கற்றல்:-

மனிதர்கள் தம்மைச் சுற்றியுள்ள பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிடமிருந்தும் சில நல்ல பழக்கங்களைக் கற்றுத் தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் பெருவாயின் முள்ளியார். சிறிய எறும்பும் கிடைக்கின்றபோதே உணவுப்பொருளை எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்துக் கொள்ளும். தூக்கணாங்குருவி குளிர், காற்று முதலியவற்றால் இடையூறு ஏற்படாத வகையில் தனக்குரிய வீட்டைக் கட்டிக் கொள்ளும். காக்கை தன் இனத்தாரை அழைத்த பின்னரே உண்ணும் பழக்கமுடையது. இம்மூன்று பழக்கங்களையும் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் சிறப்புறுவர். சுறுசுறுப்பும், எதிர்காலச் சேமிப்பும், சுற்றத்தாரை அழைத்து உண்ணலும் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுவன அல்லவா? இவற்றைச் சொல்லும் பாடலைப் பார்ப்போமா?

நந்தெறும்பு தூக்கணம்புள் காக்கை யென்றிவைபோல்
தங்கருமம் நல்ல கடைப்பிடித்துத்-தங்கருமம்
அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றி யானும் படும்

(ஆசாரக்கோவை - 96)
 
(நந்து = ஆக்கமுள்ள, சேகரிக்கும்; ஆசாரம் = ஒழுக்கம்; பெற்றி = தன்மை;  படும் = சிறப்படையும்)


4.8 உணவு உண்ணும் முறை:-

உடலைப் பாதுகாக்க உணவு அவசியம் அல்லவா! அந்த உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்பது பற்றியும் உண்ணுதல் தொடர்பாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பற்றியும் ஆசாரக்கோவையில் பல பாடல்கள் சொல்லுகின்றன.

உடல் தூய்மையைக் காப்பது உடல் நலத்திற்கு முதற்படி அல்லவா? நீராடிய பின்னரே உண்ண வேண்டும் (ஆசாகோவை-18). உணவினைத் தொழுது, சிந்தாமல் உண்ண வேண்டும் (ஆசா கோவை - 20). எப்படி உண்ணக்கூடாது? படுத்தோ, நின்றோ வெளியிடையில் இருந்தோ கட்டில் மேல் இருந்தோ உண்ணல் கூடாது. 

இது போன்ற கருத்துகள் நாம் பின்பற்ற வேண்டிய நல்ல நெறிகள் அல்லவா? உணவுப்பொருளை வீணாக்கக்கூடாது. கிழக்குத் திசை நோக்கி இருந்து உண்ண வேண்டும் (ஆசா கோவை - 20, 23).

பிறநாடுகளில் உணவுப் பொருள்களில் எதை முதலில் உண்ண வேண்டும், எதைக் கடைசியில் உண்ண வேண்டும் என்ற பழக்கங்கள் உள்ளன அல்லவா? அதுபோல் நம் நாட்டிலும் உண்டு. நம் முன்னோர் அதனையும் அறிந்து வைத்துள்ளனர். முதலில் இனிப்பான பண்டங்களை உண்ண வேண்டும். இறுதியில் கசப்பானவற்றை உட்கொள்ள வேண்டும். வேறு சுவைப் பொருள்களை இடையே சுவைத்தல் வேண்டும். பாடலைப் பார்ப்போமா?

கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறை வகையால் ஊண் 


(ஆசாரக்கோவை - 25)
(கைப்பன = கசப்பன, கடை = கடைசி, தலை = முதல், துய்க்க = உண்க)

உண்டபின் வாயை நன்கு கொப்புளித்து எச்சில் இல்லாத வகையில் சுத்தம் செய்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் சொல்லப்படுகிறது (ஆசா கோவை - 27). இது உடல் நலத்தோடு வாழ வழி காட்டுகிறது அல்லவா? 

விருந்தினர், மிக மூத்தோர், பசுக்கள், பறவைகள், பிள்ளைகள் இவர்களுக்குக் கொடுத்த பின்னரே ஒருவர் உணவு உண்ண வேண்டும் என்ற உயர்ந்த பண்பாட்டினையும் ஒரு பாடல் எடுத்துச் சொல்கிறது (ஆசா கோவை - 21).

நாம் எப்படி உணவு உண்ண வேண்டும், எப்படி நீர் பருக வேண்டும் என்பன போன்ற சாதாரண செய்திகளும் இங்கு நல்ல ஆசார அடிப்படையில் அமையும் அறிவுரைகளாகின்றன.

தண்ணீரை இரு கையாலும் குடித்தலாகாது. (ஆசா கோவை - 28) உண்ணும் போது உணவிலே கருத்துடையவனாய் உண்ணல் வேண்டும் (ஆசா கோவை-20).
 
மனக்கவலையால் பிறிதொன்றை நினைத்துக் கொண்டு உண்டால் அது உடல் நலத்துக்குக் கேடாகும் என்ற கருத்தைச் சொல்கிறது மேற்கூறிய பாடல் வரிகள்.

இனி, பிறரை உண்பிப்பதாகிய விருந்தோம்பல் பற்றி ஆசாரக்கோவை என்ன சொல்கிறது என்று பார்ப்போமா? விருந்தினர் நம் முகத்தைப் பார்த்தே நம் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொள்வார்கள். நம் முகம் மாறிவிட்டால் அவர்கள் உள்ளமும் மாறிவிடும். விருந்தினர் அனிச்ச மலரை விட மென்மையானவர்கள். அதனால் சிரித்த முகத்தோடு அவர்களை வரவேற்க வேண்டும். பின்னர் இனியவை கூற வேண்டும். அவர்கள் கால் கழுவ நீரும், படுக்கப்பாயும், அமர இருக்கையும் அளித்து அவர்களைப் பாராட்ட வேண்டும். இதன்பின்னர், நல்ல உணவு படைத்து அவர் பசியைப் போக்குதல் வேண்டும் என்பதை,

முறுவல் இனிதுரை கால்நீர் மணைபாய்
கிடக்கையோடு இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு

(ஆசாரக்கோவை - 54) 
(முறுவல் = புன்னகை; இனிதுரை = இனிய பேச்சு; கிடக்கை = படுக்கை; தலைச் சென்றார் = விருந்தினர்) 

என்ற பாடல் விளக்குவது புரிகிறதல்லவா?


4.9 அன்றாட வாழ்க்கை நெறி:-


அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில நல்ல நெறிகளை ஆசாரக் கோவை எப்படிச் சொல்கிறது என்று பார்ப்போமா?

• தூய்மை பற்றியன

முதலில் நம் இல்லத்தை எப்படிப் பாதுகாத்தால் நமக்கு நன்மை கிடைக்கும்? அதிகாலையில் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து பாத்திரங்களைத் துலக்கி வீடு முழுவதும் சாண நீர் தெளித்துத் தூய்மைப்படுத்த வேண்டும். பின்னரே அடுப்பினுள் தீ மூட்டுதல் வேண்டும் (ஆசா கோவை-46). இவ்வாறு செய்வதால் சுற்றுப்புறம் தூய்மை அடையும். சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை, அக்கால மக்கள் அறிந்திருந்ததை உணர முடிகிறது.

மேலும், குளம் முதலிய நீர் நிலைகளில் நீராடும் காலத்து எச்சில் உமிழ்தல் முதலியன செய்யக்கூடாது என நீரின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டுவதைக் குறிப்பிடுகிறது ஒரு பாடல் (ஆசா கோவை - 14). இப்பாடல் பஞ்ச பூதங்களுள் ஒன்றாகிய நீர் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்று அக்கால மக்களும் கருதியதைப் புலப்படுத்துகிறதல்லவா?


• பண்புகள் பற்றியன

பெரியோர் உவந்தனவற்றைத் தாம் விரும்புதலும், தம் இல்லத்தின்கண் கீழ்மைப் பண்புடையவரை அழைத்துச் செல்லாதிருத்தலும், தம்மோடு பழக்கமில்லாத சிறுவராய் இருப்பினும் இகழாதிருத்தலும் நன்னெறிகளாக ஆசாரக்கோவை காட்டுகிறது (ஆசா கோவை - 68).

மனிதராய்ப் பிறந்தவர் மற்றவரை மதிக்கும் மாண்புடையவராய் இருக்க வேண்டும். மனத்தில் கருணையும், அருளும், அன்பும், பணிவும் இருக்க வேண்டும். அவர்களே மற்றவர்களால் போற்றப்படுவர் என்று மனிதனுக்கு இருக்க வேண்டிய உயர் பண்புகளை உரைக்கிறது ஒரு பாடல். 

அந்தணர், தவம் உடையவர், சுமையை உடையவர், நோயுற்றவர், மூத்தவர், இளையவர், பசு, பெண்கள் என்னும் இவர்களுக்கு வழி விட்டு விலகினவர்களே மக்களால் போற்றப்படுவர் என்கிறது மற்றொரு பாடல் (ஆசா கோவை -64). இஃது அக்கால மக்களின் மனித நேய உணர்வைப் பிரதிபலிக்கிறது. 

            சான்றோர் நிறைந்த அவையில் அறிஞர் அங்க சேட்டை செய்யமாட்டார், கடுஞ்சொல் கூறமாட்டார், இருவராக இருந்து பேசுமிடத்திற்குப் போகமாட்டார் என்று அறிஞர் செயல் கூறி நன்னெறி உரைக்கிறது ஆசாரக்கோவை. இருவர் தனியே இருந்து பேசுமிடத்திற்குப் போகல் ஆகாது (ஆசா கோவை - 93) என்ற அறிவுரையில் பல நுட்பங்களைக் காணலாம். இருவர் பேசிக்கொள்வது மற்றவர் அறியக் கூடாத இரகசியமாக இருக்கலாம். அவர்கள் அந்தரங்கத்தில் குறுக்கிடக் கூடாது என்ற மனித நாகரிக மாண்பினைச் சொல்லும் அறவுரையல்லவா இது! 
4.10 விலக்கக் கூடியன:-

நன்னெறிகளைக் கூறும் ஆசாரக்கோவை விலக்கக் கூடியன எவை என்பதையும் கூறுகிறது. பிறர் மனை நயத்தல், கள்ளுண்ணல், களவு செய்தல், கொலை செய்தல், சூதாடல் போன்றவை இகழ்ச்சிக்கும், நரகத்திற்கும் காரணமான செயல்கள் ஆகும். எனவே இவை விலக்க வேண்டியன என்று வலியுறுத்துகிறார் ஆசிரியர் (ஆசா கோவை - 37).


4.11 நினைக்கக் கூடாதவை:-

ஒரு தீமை தொடர்ந்து பல தீமைகளுக்குக் காரணமாகிறது. பொய் பேசுதல், கோள் சொல்லுதல், பிறர் பொருளுக்கு ஆசைப்படல், பொறாமை கொள்ளுதல் என இவை நான்கினையும் நினைக்கவும் கூடாது. நினைத்தால் இம்மையில் பிச்சையெடுக்கும்படி வறுமை வரும். மறுமையில் நரகத்தில் செலுத்திவிடும் என்று கூறி மக்களை நல்வழிப்படுத்துகிறது (ஆசா கோவை - 38).


4.12 பேசக் கூடியவை:-

ஒருவன் பேச்சு எப்படி இருக்க வேண்டும்? வஞ்சனையின்றி இருக்க வேண்டும். பயன் உடையதாய் இருக்க வேண்டும். எப்படி இருக்கக் கூடாது? ஒருவன் பேசும் மொழி வஞ்சனையாய் இருக்கக் கூடாது. பயனற்ற சொல்லாய் இருக்கக் கூடாது. நாவடக்கமின்றிப் பேசுதல் கூடாது. பிறரைப் பழித்துரைக்கக் கூடாது. நிலையான நல்லொழுக்கம் உள்ளவர் செயலாக இவற்றைச் சொல்கிறது ஆசாரக் கோவை.

படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே யென்றும்
அசையாத உள்ளத்தவர்

(ஆசாரக்கோவை - 52)
(படிறு = வஞ்சனை; பயனில = பயனற்ற சொல்; பட்டி உரை = நாவடக்கமில்லாத சொல்; வசை = தூற்றுதல்; புறன் = கோள்; அசையாத = உறுதியான)

இன்னும் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போமா? நாம் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும். அதை நாமே பாராட்டிக் கூறக் கூடாது. பிறர் இட்ட உணவை இகழ்தல் கூடாது. தம் அறச் செய்கையையும் நோன்பையும் தாமே புகழ்தலும் தகாது. ஆகையால் இவற்றைத் தவிர்க்க வேண்டும் (ஆசா கோவை - 88). 
 
உலகியலில் ஒருவர் எங்காவது புறப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது எங்குப் போகிறீர்கள் என்று கேட்கக் கூடாது என்பர். கிளம்பும் பொழுது பின்னால் நின்று அழைக்கக் கூடாது, தும்மக் கூடாது என்பர். பெருவாயின் முள்ளியாரும் ஒரு பாடலில் இவற்றைச் சொல்கிறார். பாடலைப் பாருங்கள்.

எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்
எங்குற்றுச் சேறீரோ என்னாரே முன்புக்கு
எதிர்முகமா நின்று உரையார் இருசார்வும்
கொள்வர் குரவர் வலம்

(ஆசாரக்கோவை - 58)
(கூவார் = கூப்பிட மாட்டார்; சேறீரோ = செல்கின்றீர்; இருசார்வு = இரண்டு பக்கங்கள்)

பேச்சு ஒரு கலை, ஒரே செய்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகச் சொல்வர். பலரும் பாராட்டும் வண்ணம் தக்கபடி சொல்வதன்றோ முறை! இது பற்றி ஆசாரச் கோவை என்ன சொல்கிறது? மிக விரைவாக ஒருவரிடம் ஒரு செய்தியைச் சொல்லக் கூடாது. பொய்யுரையும் மிகைப்படுத்தலுமின்றிக் கூறுதல் வேண்டும். எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதைச் சுருக்கமாகத் தெளிவாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். பாடலைப் பார்ப்போம்.

விரைந்துரையார் மேன்மேல் உரையார் பொய்யாய்
பரந்துரையார் பாரித்துரையார் - ஒருங்கனைத்தும்
சில்லெழுத்தி னாலே பொருளடங்கக் காலத்தால்
சொல்லுக செவ்வி யறிந்து

(ஆசாரக்கோவை -76)
(விரைந்து = வேகமாக; மேன்மேல் = அடுத்தடுத்து; பரந்து = விரித்து; பாரித்து = விவரித்து; சில்லெழுத்து = சில சொற்கள்)

வள்ளுவரும் சொல்வன்மை உடையவரை வெல்வது அரிது (647) என்பர். சொல்வன்மை உடைய அனுமான் சொல்லின் செல்வர் என்று பாராட்டப்படுகிறார் அல்லவா?


4.13 செய்யக் கூடாதவை
:-

ஒருவர் செய்யும் செயல்களே அவர் எத்தகைய பண்பை உடையவர் என்பதைக் காட்டும் அல்லவா?

ஒரு பொருளை வீசி எறிதல், கல்லெறிதல், மற்றவரை இகழ்ந்து பேசுதல், கை தட்டல் முதலியன தீயொழுக்கம் உடையார் செயல்களாம். எனவே, இவற்றை விலக்க வேண்டும் என்கிறது ஆசாரக்கோவை (53). 

கிடைத்தற்கரியது என்று தெரிந்தவற்றை விரும்புதலும் இழந்த பொருளுக்கு வருந்தலும், அரிய துன்பத்திற்கு மனம் கலங்குதலும் பயனற்ற செயல்கள், இந்தப் பயனற்ற செயல்களை விலக்க வேண்டும் என்கிறார் பெருவாயின் முள்ளியார் (ஆசா கோவை - 89) 


பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை  


(கடைச்சங்க காலத்தை சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு  
                     நூல்களில் ஒன்று ஆசாரக்கோவை)



1. ஆசார வித்து
(பஃறொடை வெண்பா)
நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து

2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்

(இன்னிசை வெண்பா)
பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழக்கம் பிழையா தவர்.

3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்

(இன்னிசை சிந்தியல் வெண்பா)
தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.

4. முந்தையோர் கண்ட நெறி

(இன்னிசை வெண்பா)
வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.

5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை

(இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.


6.. எச்சிலுடன் காணக் கூடாதவை

(இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்
தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென
நன்கறிவார் நாளும் விரைந்து.

7. எச்சில்கள்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயின்
விழைச்சுஇவை எச்சில் இந்நான்கு.

8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகள் ஆகுறு வார்.

9. காலையில் கடவுளை வணங்குக

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி.

10. நீராட வேண்டிய சமயங்கள்

(பஃறொடை வெண்பா)
தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர்.

11. பழைமையோர் கண்ட முறைமை

(இன்னிசை வெண்பா)

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத்து உண்ணார்
உடுத்தாடை நீருள் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத்து என்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை.

12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
பிறர்உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து.

13. செய்யத் தகாதவை

(இன்னிசை வெண்பா)
நீருள் நிழல்புரிந்து நோக்கார் நிலம்இராக்
கீறார் இராமரமும் சேரார் இடர்எனினும்
நீர்தொடாது எண்ணெய் உரையார் உரைத்தபின்
நீர்தொடார் நோக்கார் புலை.

14. நீராடும் முறை

(இன்னிசை வெண்பா)
நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
காய்ந்தது எனினும் தலைஒழிந்து ஆடாரே
ஆய்ந்த அறிவி னவர்.

15. உடலைப்போல் போற்றத் தக்கவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் ஞாயிறு
தம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்
ஐம்பூதம் அன்றே கெடும்.

16. யாவரும் கூறிய நெறி

(சவலை வெண்பா)
அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர்இவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.

17. நல்லறிவாளர் செயல்

(இன்னிசை வெண்பா)
குரவர் உரையிகந்து செய்யார் விரதம்
குறையுடையார் தீர மறவார் - நிறையுவா
மேல்கோலும் தின்னார் மரங்குறையார் என்பவே
நல்லறி வாளர் துணிவு.

18. உணவு உண்ணும் முறைமை

(இன்னிசை வெண்பா)
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெறுத்துக்
கொண்டார் அரக்கர் குறித்து.

19. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
காலினீர் நீங்காமை உண்டிடுக பள்ளியுள்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.

20. உண்ணும் விதம்

(இன்னிசை வெண்பா)
உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்குஇரீஇ யாண்டும்
பிறிதியாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
உண்க உகாஅமை நன்கு.

21. ஒழுக்கம் பிழையாதவர் செய்வது

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் தொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.

22. பிற திசையும் நல்ல

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல
முகட்டு வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
முகட்டு வழிகட்டில் பாடு.

23. உண்ணக்கூடாத முறைகள்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
இறந்தொன்றும் தின்னற்க நின்று.

24. பெரியோருடன் இருந்து உண்ணும் முறை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்
என்பெறினும் ஆற்றவலம் இரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்.

25. கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை
உண்ணும் முறைமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறைவகையால் ஊண்.

26. உண்ணும் கலங்களைக் கையாளும் முறை

(இன்னிசை வெண்பா)
முதியவரைப் பக்கத்து வையார் விதிமுறையால்
உண்பவற்றுள் எல்லாஞ் சிறிய கடைப்பிடித்து
அன்பில் திரியாமை ஆசாரம் நீங்காமை
பண்பினால் நீக்கல் கலம்.

27. உண்டபின் செய்ய வேண்டியவை

(பஃறொடை வெண்பா)
இழியாமை நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்கால் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு
ஒத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி.

28. நீர் குடிக்கும் முறை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இருகையால் தண்ணீர் பருகார் ஒருகையால்
கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு இருகை
சொறியார் உடம்பு மடுத்து.

29. மாலையில் செய்யக் கூடியவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
அந்திப் பொழுது கிடவார் நடவாரே
உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி
அல்குண்டு அடங்கல் வழி.

30. உறங்கும் முறை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது
வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி.

31. இடையில் செல்லாமை முதலியன

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இருதேவர் பார்ப்பார் இடைபோகார் தும்மினும்
மிக்கார் வழுத்தில் தொழுதெழுக ஒப்பார்க்கு
உடன்செல்லல் உள்ளம் உவந்து.

32. மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்

(இன்னிசை வெண்பா)

புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்.

33. மலம் சிறுநீர் கழிக்கும் முறை

(குறள் வெண்பா)

பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்.

34. மலம், சிறுநீர் கழிக்கும் திசை

(இன்னிசை வெண்பா)
பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்
இந்திர தானம் பெறினும் இகழாரே
தந்திரத்து வாழ்துமென் பார்.

35. வாய் அலம்பாத இடங்கள்

(இன்னிசை வெண்பா)
நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார்
வழிநிலை நீருள்ளும் பூசார் மனத்தால்
வரைந்துகொண் டல்லது பூசார் கலத்தினால்
பெய்பூச்சுச் சீரா தெனின்.

36. ஒழுக்க மற்றவை

(பஃறொடை வெண்பா)
சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்
இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்
படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்
பலரிடை ஆடை உதிராரே என்றும்
கடனறி காட்சி யவர்.

37. நரகத்துக்குச் செலுத்துவன

(நேரிசை வெண்பா)
பிறர் மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் - திறனிலரென்று
எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்.

38. எண்ணக்கூடாதவை

(இன்னிசை வெண்பா)
பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயம்தீர் காட்சியார் சிந்தியார் - சிந்திப்பின்
ஐயம் புகுவித்து அருநிரயத் துய்த்திடும்
தெய்வமும் செற்று விடும்.

39. தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தமக்கென்று உலையேற்றார் தம்பொருட்டூண் கொள்ளார்
அடுக்களை எச்சில் படாஅர் மனைப்பலி
ஊட்டினமை கண்டுண்க ஊண்.

40. சான்றோர் இயல்பு

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உயர்ந்ததன் மேலிரார் உள்ளழிவு செய்யார்
இறந்தின்னா செய்தக் கடைத்தும் குரவர்
இளங்கிளைஞர் உண்ணு மிடத்து.

41. சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கண்ணெச்சில் கண்ணூட்டார் காலொடு கால்தேயார்
புண்ணியம் ஆய தலையோடு றுப்புறுத்த
நுண்ணிய நூலறிவி னார்.

42. மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.

43. உடன் உறைதலுக்கு ஆகாத காலம்

(இன்னிசை வெண்பா)
உச்சியம் போழ்தோடு இடையாமம் ஈரந்தி
மிக்க இருதேவர் நாளோ டுவாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுறைவின் கண்.

44. நாழி முதலியவற்றை வைக்கும் முறை

(இன்னிசை வெண்பா)
நாழி மணைமேல் இரியார் மணைகவிழார்
கோடி கடையுள் விரியார் கடைத்தலை
ஓராது கட்டில் பாடஅர் அறியாதார்
தந்தலைக்கண் நில்லா விடல்.

45. பந்தலில் வைக்கத் தகாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துடைப்பம் துகள்காடு புல்லிதழ்ச் செத்தல்
கருங்கலம் கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும்
பரப்பற்க பந்த ரகத்து.

46. வீட்டைப் பேணும் முறைமை

(பஃறொடை வெண்பா)
காட்டுக் களைந்து கலம்கழீஇ இல்லத்தை
ஆப்பிநீ ரெங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரக நிறைய மலரணிந்து
இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க
நல்லது உறல்வேண்டு வார்.

47 நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்

(இன்னிசை வெண்பா)
அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்
அப்பூமி காப்பார்க்கு உறுகண்ணும் மிக்க
நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்குநூல் ஓதாத நாள்.

48. அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கலியாணம் தேவர் பிதிர்விழா, வேள்வியென்ற
ஐவகை நாளும் இகழா தறஞ்செய்க
பெய்க விருந்திற்கும் கூழ்.

49. நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும்
நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்
குடிமைக்கும் தக்க செயல்.

50. கேள்வியுடையவர் செயல்

(இன்னிசை வெண்பா)
பழியார் இழியார் பலருள் உறங்கார்
இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றி
இல்லாரை எள்ளி இகழ்ந்துரையார் தள்ளியும்
தாங்கருங் கேள்வி யவர்.

51. தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்
நம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன்
முன்னொளியும் பின்னொளியும் அற்று.

52. தளராத உள்ளத்தவர் செயல்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே என்றும்
அசையாத உள்ளத் தவர்.

53. ஒழுக்கமுடையவர் செய்யாதவை

(இன்னிசை வெண்பா)
தெறியொடு கல்லேறு வீளை விளியே
விகிர்தம் கதம்,கரத்தல் கைபுடை தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு இன்னவை யெல்லாம்
பயிற்றார் நெறிப்பட் டவர்.

54. விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முறுவல் இனிதுரை கால்நீர் இணைபாய்
கிடக்கையோடு இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு.

55. அறிஞர் விரும்பாத இடங்கள்

(பஃறொடை வெண்பா)
கறுத்த பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும்
நிறுத்த மனமில்லார் சேரி அகத்தும்
குணநோக்கிக் கொண்டவர் கோள்விட் டுழியும்
நிகரில் அறிவினார் வேண்டார் பலர்தொகு
நீர்க்கரையும் நீடு நிலை.

56. தவிர்வன சில

(பஃறொடை வெண்பா)
முளிபுல்லும் கானமும் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி ஓடார் தெளிவிலாக்
கானம் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குரவு ஆற்றப் பெருகினும் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.

57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை

(இன்னிசை வெண்பா)
பாழ்மனையும் தேவ குலனும் சுடுகாடும்
ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்
தாமே தமியர் புகாஅர் பகல்வளரார்
நோயின்மை வேண்டு பவர்.

58. ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை

(இன்னிசை வெண்பா)
எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்
எங்குற்றுச் சேறீரோ என்னாரே முன்புக்கு
எதிர்முகமா நின்றும் உரையார் இருசார்வும்
கொள்வர் குரவர் வலம்.

59. சில தீய ஒழுக்கங்கள்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடம்புநன்று என்றுரையார் ஊதார் விளக்கும்
அடுப்பினுள் தீநந்தக் கொள்ளார் அதனைப்
படக்காயார் தம்மேற் குறித்து.

60. சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
யாதொன்றும் ஏறார் செருப்பு வெயின்மறையார்
ஆன்றவிந்த முத்த விழுமியார் தம்மோடுஅங்கு
ஓராறு செல்லுமிடத்து.

61. நூல்முறை உணர்ந்தவர் துணிவு

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை யாளர் துணிவு.

62. சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கால்வாய்த் தொழுவு சமயம் எழுந்திருப்பு
ஆசாரம் என்பர் குரவர்க்கு இவையிவை
சாரத்தால் சொல்லிய மூன்று.

63. கற்றவர் கண்ட நெறி

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துறந்தாரைப் பேணலும் நாணலும்தாம் கற்ற
மறந்தும் குரவர்முன் சொல்லாமை மூன்றும்
திறங்கண்டார் கண்ட நெறி.

64. வாழக்கடவர் எனப்படுவர்

(இன்னிசை வெண்பா)
பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்டு
ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
போற்றி யெனப்படு வார்.

65. தனித்திருக்கக் கூடாதவர்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா(க) உறையற்க ஐம்புலனும்
தாங்கற்கு அரிதஆக லான்.

66. மன்னருடன் பழகும் முறை

(இன்னிசை வெண்பா)
கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்
கொடையளிக்கண் பொச்சாவார் கோலநேர்செய்யார்
இடையறுத்துப் போகிப் பிறனொருவன் சேரார்
கடைபோக வாழ்துமென் பார்.

67. குற்றம் ஆவன

(இன்னிசை வெண்பா)
தமக்குற்ற கட்டுரையும் தம்மிற் பெரியார்
உரைத்ததற்கு உற்ற உரையுமஃ தன்றிப்
பிறர்க்குற்ற கட்டுரையும் சொல்லற்க சொல்லின்
வடுக்குற்ற மாகி விடும்.

68. நல்ல நெறி

(இன்னிசை வெண்பா)
பெரியார் உவப்பனதாம் உவவார் இல்லம்
சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்
பிள்ளையே ஆயினும் இழித்துரையார் தம்மோடு
அளவளா வில்லா இடத்து.

69. மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன

(இன்னிசை வெண்பா)
முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார்
தனிமை இடத்துக்கண் தம்கருமம் சொல்லார்
இனியவை யாமறிதும் என்னார் கசிவின்று
காக்கைவெள் என்னும் எனின்.

70. மன்னன் முன் செய்யத் தகாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உமிவும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
வகையில் உரையும் வளர்ச்சியும் ஐந்தும்
புணரார் பெரியா ரகத்து.

71. மன்னன் முன் சொல்லக் கூடாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இறைவர்முன் செல்வமும் கல்வியும் தேசும்
குணனும் குலமுடையார் கூறார் பகைவர்போல்
பாரித்துப் பல்காற் பயின்று.

72. வணங்கக்கூடாத இடங்கள்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பெரியார் மனையகத்தும் தேவ குலத்தும்
வணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு
நேர்பெரியார் செல்லு மிடத்து.

73. மன்னர் முன் செய்யத் தகாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்
இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின்
அசையாது நிற்கும் பழி.

74. ஆசிரியரிடம் நடக்கும் முறைமை

(இன்னிசை வெண்பா)
நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்
வினாவற்க சொல்லொழிந்தக் கால்.

75. சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடுக்கை இகவார் செவிசொறுண்டார் கைம்மேல்
எடுத்துரையார் பெண்டிர்மேல் நோக்கார் செவிச்சொல்லும்
கொள்ளார் பெரியார் அகத்து.

76. சொல்லும் முறைமை

(இன்னிசை வெண்பா)
விரைந்துரையார் மேன்மேல் உரையார்பொய் யாய
பரந்துரையார் பாரித்து உரையார் - ஒருங்கெனைத்தும்
சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலந்தால்
சொல்லுக செவ்வி அறிந்து.

77. நல்ல குலப்பெண்டிர் இயல்பு

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தம்மேனி நோக்கார் தலையுளரார் கைந்நொடியார்
எம்மேனி ஆயினும் நோக்கார் தலைமகன்
தம்மேனி அல்லால் பிற.

78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பிறரொடு மந்திரம் கொள்ளார் இறைவனைச்
சாரார் செவியோரார் சாரின் பிறிதொன்று
தேர்வார்போல் நிற்க திரிந்து.

79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்

(நேரிசை வெண்பா)
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
இன்ப வகையால் ஒழுகலும் - அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமையும் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள.

80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை

(நேரிசை வெண்பா)
தெறுவந்தும் தங்குரவர் பேருரையார் இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர் - பெரியாரை
என்று முறைகொண்டு கூறார் புலையரையும்
நன்கறிவார் கூறார் முறை.

81. ஆன்றோர் செய்யாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
புழைக்கடைப் புகார் அரசன் கோட்டி உரிமை
இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வத்
தொழிற்குரிவர் அல்லா தவர்.

82. மனைவியின் உள்ளம் மாறுபடுதல்

(இன்னிசை வெண்பா)
வண்ண மகளிரி இடத்தொடு தம்மிடம்
ஒள்ளியம் என்பார் இடம்கொள்ளார் தெள்ளி
மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்கு
உவப்பன வேறாய் விடும்.

83. கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை

(இன்னிசை வெண்பா)
நிரல்படச் செல்லார் நிழன்மிதித்து நில்லார்
உரையிடை ஆய்ந்து உரையார் ஊர்முனிவ செய்யார்
அரசர் படையளவுஞ் சொல்லாரே என்றும்
கடைபோக வாழ்துமென் பார்.

84. பழகியவை என இகழத் தகாதவை

(இன்னிசை வெண்பா)
அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழைஉறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய எளிய பயின்றனஎன்று எண்ணி
இகழின் இழுக்கந் தரும்.

85. செல்வம் கெடும் வழி

(நேரிசை வெண்பா)
அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்பப் பெருகியக் கண்ணும் - திறப்பட்டார்
மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யின்
மன்னிய செல்வம் கெடும்.

86. பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உண்டது கேளார்; குரவரை மிக்காரைக்
கண்டுழிக் கண்டால் மனந்திரியார்; புல்லரையும்
உண்டது கேளார் விடல்.

87. கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்
மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
நில்லார்தாம் கட்டின் மிசை.

88. பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உதவிப் பயனுரையார் உண்டி பழியார்
அறத்தொடு தான்நோற்ற நோன்பு வியவார்
திறத்துளி வாழ்தும்என் பார்.

89. கிடைக்காதவற்றை விரும்பாமை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எய்யாத வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
மெய்யாய காட்சி யவர்.

90. தலையில் சூடிய மோத்தல்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலைக்கிட்ட பூமேவார் மோந்தபூச் சூடார்
பசுக்கொடுப்பின் பார்ப்பார்கைக் கொள்ளாரே என்றும்
புலைக்கு எச்சில் நீட்டார் விடல்.

91. பழியாவன

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மோட்டுடைப் போர்வையோடு ஏக்கழுத்துந் தாளிசைப்பும்
காட்டுளே யானும் பழித்தார மாம்தம்மின்
மூத்த உளஆக லான்.

92. அந்தணரின் சொல்லைக் கேட்க

(நேரிசை வெண்பா)
தலைஇய நற்கருமஞ் செய்யுங்கால் என்றும்
புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா
அந்தணர்வாய்ச் சொல்கேட்டுச் செய்க அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்ப தில்லை.

93. சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மன்றத்து நின்று உஞற்றார் மாசுதிமிர்ந் தியங்கார்
என்றும் கடுஞ்சொல் உரையார் இருவராய்
நின்று உழியும் செல்லார் விடல்.

94. ஐயம் இல்லாத அறிவினர் செய்கை

(இன்னிசை வெண்பா)
கைசுட்டிக் கட்டுரையார் கால்மேல் எழுத்திடார்
மெய்சுட்டி இல்லாரை உள்ளாரோடு ஒப்புரையார்
கையில் குரவர் கொடுப்ப இருந்துஏலார்
ஐயமில் காட்சி யவர்.

95. பொன்னைப் போல் காக்கத் தக்கவை

(இன்னிசை வெண்பா)
தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்குஎன்று
உன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்
மன்னிய ஏதம் தரும்.

96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்

(இன்னிசை வெண்பா)
நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்
தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்
அப்பெற்றி யாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றி யானும் படும்.

97. சான்றோர் முன் சொல்லும் முறை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தொழுதாலும் வாய்புதைத் தானும் அஃதன்றிப்
பெரியார்முன் யாதும் உரையார் பழியவர்
கண்ணுள்ளே நோக்கி யுரை.

98. புகக் கூடாத இடங்கள்

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
சூதர் கழகம் அரவம் அறாக்களம்
பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
ஏதம் பலவும் தரும்.

99. அறிவினர் செய்யாதவை

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உரற்களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார்
இல்லம் புகாஅர் விடல்.

100. ஒழுக்கத்தினின்று விலகியவர்

(பஃறொடை வெண்பா)
அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
அரசர் தொழில்தலை வைத்தான் மணாளனென்ற
ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
ஆசாரம் வீடுபெற் றார்.



                                                     ஆசாரக் கோவை முற்றிற்று.






தொகுப்பு :-

சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி, 
மயிலம் - 604 304.
விழுப்புரம் மாவட்டம்,  
தமிழ்நாடு - இந்தியா.

Wednesday, October 24, 2012

நன்னெறி (ஆசிரியர் : துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்)

நன்னெறி.
(ஆசிரியர் : துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்) 

தமிழில் தோன்றிய அறநூல்களில் நன்னெறியும் ஒன்று. மக்களை நல்வழிப்படுத்தும் நல்ல அறநெறிகளைக் கூறுவதால் இந்நூல் நன்னெறி எனப்படுகிறது. இந்நூலைச் சிவப்பிரகாசர் இயற்றியுள்ளார். இவரைத் துறை மங்கலம் சிவப்பிரகாசர் என்றும் சிவப்பிரகாச சுவாமிகள் என்றும் அழைப்பர். துறைமங்கலத்தில் நெடுநாள் தங்கியிருந்ததால் அப்பெயரையும் சிவப்பிரகாசரின் பெயருடன் சேர்த்து அழைக்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் இறை அடியவராகவே வாழ்ந்ததால் சிவப்பிரகாசரைச் சுவாமிகள் என்றும் அழைக்கின்றனர். 

இவரது காலம் பதினேழாம் நூற்றாண்டு.

முப்பத்திரண்டு ஆண்டுகள் மட்டுமே இம்மண்ணில் வாழ்ந்த சிவப்பிரகாசர் முப்பது நூல்கள் படைத்துள்ளார். இவர் படைத்துள்ள நூல்கள் முழுவதையும் நீங்கள் இணைய நூலகத்தில் பார்த்துப் படிக்கலாம். இந்தப் பாடத்தில் அவர் இயற்றிய நன்னெறியில் இடம்பெற்றுள்ள அறக் கருத்துகளை மட்டும் பார்ப்போம்.

நன்னெறி என்னும் இந்நூல் நாற்பது பாடல்களைக் கொண்டது. இந்நூலில் உள்ள பாடல்களைச் சிவப்பிரகாசர் முதலில் கடற்கரையில் உள்ள மணலில் எழுதினார். பின்னர் அவருடைய மாணவர்கள் அவற்றை ஏடுகளில் எழுதினார்கள் என்று இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடல்கள் ‘மகடூஉ முன்னிலையாக அதாவது ஒரு பெண்ணை அழைத்துக் கூறுவது போல அமைந்துள்ளன.

நன்னெறி...

கடவுள் வாழ்த்து:-

மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.


பொருள் விளக்கம்:-
மின்னும் சடா முடி உடைய விநாயகன் திருப்பாதங்களைத் தொழுது எழ, நன்னெறிப் வெண்பா பாடல்கள் நாற்பதும் இனிதாக வரும். 



நூல்:-
 
1 . உபசாரம் கருதாமல் உதவுக

என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று பொருள்கொடுப்போர் தீதற்றோர் - துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து? 



பொருள் விளக்கம்:-


அழகான பூ அணிந்த மணமான கூந்தல் உடையவளே, தினந்தோறும் உணவின் சுவை அறியாத கை உணவை எடுத்துக் நாவிற்கு கொடுப்பது புகழுக்காகவா !! அது போல் நமக்கு அறிமுகம் ஆகாமல், நன்கு முகமன் கூறாதவருக்கும் நல்ல குணம் படைத்தவர்கள் உதவுவார்கள்.

2 . வன்சொல்லும் இனிமையாகும்

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஓண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு. 



பொருள் விளக்கம்:-
 
குற்றம் இல்லாதவர், நம் மேல் அன்பு வைப்பவர் நம்முடைய நலம் பொருட்டு கூறும் கடினமான சொல்லும் நமக்கு நன்மைப் பயக்கும். ஒன்றுக்கும் உதவாமல் இனிதாக பேசுபவர் பிறர் சொல் இதற்கு மாறாக இருக்கும். பக்தியுடன் தொண்டர் ஒருவர் இட்ட கல்லும் அழகான மலராக மாறியது. ஆனால் கரும்பு வில் உடைய மன்மதன் எறிந்த பூ கணைகளும் சிவபெருமானுக் கோபம் ஊட்டி மன்மதை எரிக்கச் செய்தது. 


3 . இனிய வழியறிந்து ஒருபொருளை அடைக.

தங்கட்கு உதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட்கு உரியவரால் தாங்கொள்க - தங்கநெடுங்
குன்றினால் செய்தனைய கொங்காய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து. 



பொருள் விளக்கம்:-

தங்கக் குன்று போல் அழகான தனங்களை உடைய பெண்ணே, பசுவிடம் பால் கறக்க விரும்புபவர் அதன் கன்றை காட்டி பால் கரப்பதை போல். நமக்கு உதவி செய்ய நினைக்காத ஒருவரிடன் இருந்து உதவி தேவையெனின், அவருடன் இணங்கி இருப்பவர் ஒருவர் மூலமாக அந்த உதவியை பெற வேண்டும் என்பதை உணர்ந்து கொள்.
 
4 . செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியதாம்

பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. 



பொருள் விளக்கம்:-

ஒருவருக்கு உதவாத உப்புக் கடல் நீர் மேகங்களால் கவரப்பட்டு மழை நீராக மக்களுக்கு பயன்படுவது போல் ஒருவருக்கும் உதவி செய்யாத ஒருவருடைய செல்வம் இறைவனின் திருவருளால் உதவி செய்பவருடைய கைகளில் சென்று விடும்.

 
5 . நட்பிற்பிரியலாகாது

நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம். 



பொருள் விளக்கம்:-

பூங்குழல்களை உடைய பெண்ணே, நெல் உமியுடன் சேர்ந்து இருக்கும் வரை தான் அது விதை நெல்லாக இருக்கும். அந்த உமி நெல்லில் இருந்து விலகியவுடன் மீண்டும் இணைத்தாலும் அது விதை நெல்லாக வளரும் பலம் பெறாது. அது போல் நன்கு பழகி விலகிய நண்பர்கள் மீண்டும் இணைந்தாலும், அந்த நட்பில் முன்பு இருந்தது போல் நட்பு இருக்காது. ஆதலால் நண்பர்களிடம் குற்றம் கண்டு விலகுதல் கூடாது.



6 . தம்பதிகள் ஒற்றுமை

காதல் மனையாளும் காதலும் மாறின்றித்
தீதில் ஓருகருமம் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்ல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண். 



பொருள் விளக்கம்:-



பதினாறு கலைகள் நிரம்பிய முழு மதி போல் முகத்தை உடையவளே, ஒரு விஷயத்தை இரண்டு கண்களும் தான் நோக்குகின்றது, ஆனால் பார்வை ஒன்று தான். அது போல் கணவனும், அன்பு மனைவியும் இரண்டு நபர்கள் ஆனாலும் சிந்தனையில், செயலில் ஒத்து இருந்தால் சிறந்த பலன்கள் பெறுவார்கள்.
 

7 . கல்விச் செருக்குக் கூடாது

கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனையசெக்கு ஆழ்த்தி - விடலே
முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும். 



பொருள் விளக்கம்:-



ஒருவருக்கு கடல் அளவு அறிவு பெற்று இருந்தாலும், சீறும் சிங்கம் போல் கர்வத்துடன் இருக்கக்கூடாது. முனிவர்களுக்கு அரசரான குறு முனி அகத்தியர் ஏழு கடலையும் குடித்து விட்டது போல், நம் ஆனவத்தை அடக்க வேறு ஒருவரும் உள்ளனர் என்பதை உணர வேண்டும்.


 
8 . ஆறுவது சினம்

உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்குசினம் காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடடங்கரைதான் பேர்த்து
விடுத்த லரிதோ விளம்பு. 



பொருள் விளக்கம்:-



நீரின் அளவு பெருகி இருக்கும் போது அணையை காப்பதற்கு அவசரப்பட்டு அணையை உடைத்து சேதத்தை விளைவிப்பதை விட, நீரை கால்வாய் வழியே மென்மையாக ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவதே சிறந்தது. அதைப் போல் மனம் கொதித்து கோபம் வரும் போதும் அதை அடக்கி ஆளுவதே சிறந்த குணம். அதுவே சிறந்த மனிதனின் குணமென்க.


9 . துணையுடையார் வலிமையுடையார்

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தம்மைத்தான் மருவின் - பலியேல்
கடவுள் அவிர்சடைமேல் கட்செவி யஞ்சாதே
படர்சிறைய புள்ளரசைப் பார்த்து.


  
பொருள் விளக்கம்:-



வலிமை குறைந்தவர் வலிமை நிறைந்தவரை கண்டு பயன்படத் தேவையில்லை அவர்கள் வேறு ஒரு வலிமையுடையவருடன் சேரும் போது. பரமசிவன் காதுகளில், கழுத்தில் ஆபரணமாக இருக்கும் பாம்பு, பறவைகளின் அரசரான கருடனைக் கண்டு அஞ்சாமல் இருப்பது போல். யாருக்கும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே. ஆகையால் நம்முடைய வலிமைக்கு தகுந்து அதனினும் வலிமையுடையவருடன் நட்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
 

 10. தன்னலம் கருதலாகாது

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகின்
நிறையிருளை நீக்குமேல் நின்று. 



பொருள் விளக்கம்:-


சிறந்த மனிதர்கள் வறுமை உற்ற காலத்திலும் அவர்களை விட வறுமையில் இருப்பவரை கண்டால், தங்களுக்கு என்று வைத்து இருக்கும் பொருளையும் கொடுத்து உதவுவார்கள். நிலவு தன் பின்புறம் இருட்டு இருந்தாலும் அதை நீக்காமல் , இருளாக இருக்கும் இந்த உலகத்துக்கு வெளிச்சம் கொடுத்து உதவுவதைப் போல்.

 
11. அறிஞர் ஐம்புலன்கட்கு அடிமையாகார்
பொய்ப்புலன்கள்  ஐந்துநோய் புல்லியர் பாலன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பிற்
சுழன்றுகொல் கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு. 



பொருள் விளக்கம்:-



நிலையற்ற இன்பத்தை அளிக்கும் பொய்யான இந்த மெய்யில் இருக்கும் ஐந்து புலன்களும் மன உறுதி அற்றவரைத் தான் தாக்கி துன்பத்தில் ஆழ்த்தும் மன உறுதியுடன் இருப்பவரை ஒன்றும் செய்ய இயலாது. வெகு வேகமாக அடிக்கும் சூறாவளிக் காற்று பெரிய கல் தூணைப் புரட்டிப் போடாமல், சிறு துரும்பை பந்தாடுவதைப் போல்
 
 
12. உடம்பில் உயிர் அமைந்த வியப்பு

வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை - தீருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு. 



 பொருள் விளக்கம்:-



அழகு நிறைந்தவளே, ஓட்டை பானையில் நீர் சிந்துவது ஒன்றும் புதுமையில்லை, நம்மை வருத்தம் செய்யும் உயிர் உடலில் ஒன்பது துளை இருந்தும் இறைவன் விதிக்கும் வேலை வரும் வரை வெளியேராமல் தங்குவதே புதுமை.
 
 
13. அன்பொடு உதவுக

பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்றமுலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர். 



பொருள் விளக்கம்:-



அமுதம் சுரக்கும் மலை போன்ற தனங்களை உடைய பெண்ணே, நிலவு தன் பிறை அளவு மாறுதலுக்கு ஏற்ப ஒளி வீசுவது போல். உயர்ந்த குணம் உடையவர்கள் தங்கள் வருமானத்தைப் பொறுத்து விருப்புடன் வறுமையுடன் இருப்பவருக்கு உதவுவார்கள்.
 

 14. செல்வச் செருக்குக் கூடாது

தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று
கலையா யாவர் செருக்குச் சார்தல் - இலையால்
இரைக்கும்வண்டு ஊதுமலர் ஈர்ங்கோதாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு. 



பொருள் விளக்கம்:-



வண்டுகள் மொய்க்கும் மலர் மணக்கும் கூந்தல் உடையே பெண்ணே, மேரு மலையும் ஒரு நாள் கடலில் மூழ்கியது, அதைப் போல் தன்னிடம் இருக்கும் செல்வம் நிலையில்லாதது, ஓரிடம் தங்காமல் சென்று விடும் என்பதை உணர்ந்து அறிவு உடையவர்கள் செல்வம் வரும் போது செருக்கு கொள்ளக் கூடாது.

 
15. அன்பற்ற செல்வம் பயனற்றது

இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் யிருந்துமவர்க் கென்செய்யும் - நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும்
விழிலார்க்கு ஏது விளக்கு 



பொருள் விளக்கம்:-

எழுதப் படிக்க தெரியாத கல்வி அறிவு இல்லாதவருக்கு பழமையான அரிய நூல்கள் இருப்பதால் ஒரு பயனும் இல்லை. கண் தெரியாத குருடனுக்கு விளக்கு இருந்து என்ன பயன் ? அதைப் போல் மனிதர்களின் மேல் அன்பு இல்லாதவர்களுக்கு இடம், பொருள், வேலைக்காரர்கள், சொத்து, சுகம் இருந்து என்ன பயன் ?

 
16. மேலோர் இழிந்தோர்க்கும் உதவுவார்

தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர்
தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல். 



பொருள் விளக்கம்:-



மிகப்பெரிய கடலும் உப்பக்கழிக்குள் வந்து நீரை நிறைக்கும் பிறருக்கு உப்பு வழங்குவதற்காக, அதைப் போல்தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், தலைமைப் பதவி வகித்தாலும் தன் நிலையிலும் கீழே உள்ளவருக்கும் உதவி புரிவர் உயர்ந்த குணம் உடைய மேலோர்.

 
17. வள்ளல்கள் வறுமையிலும் உதவிபுரிவார்கள்

எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன்
மைந்தர்தம் ஈகைமறுப்பரோ - பைந்தொடிஇ
நின்று பயனுதவி
யில்லா அரம்பையின் கீழ்க்
மன்றும் உதவும் கனி. 



பொருள் விளக்கம்:-


அழகான மென்னிடையை உடைய பெண்ணே, வாழை மரம் கனி ஈன்றியவுடன் வெட்டப்பட்டாலும், அதன் கன்று மீண்டும் வளர்த்து கனி கொடுக்கும். அது போல் வள்ளற் குணம் படைத்த பெரியவர்கள் கொடுத்து கொடுத்து வறுமை நிலை வந்தாலும், அவரின் மகன் அடுத்தவருக்கு கொடுத்துதவ மறுக்க மாட்டார்.


 18. இன்சொல்லையே உலகம் விரும்பும்

இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல். 



பொருள் விளக்கம்:-

பொன் போன்ற கதிர்களை உடைய கொதிக்கும் சூரியன் கதிர்களைக் கண்டு கடல் பொங்குவதில்லை, ஆனால் குளிர்ந்த ஒளியை உண்டாக்கும் நிலவின் ஒளியை கண்டு தான் கடல் பொங்கும். அது போல் வன் சொல்லை கண்டு இந்த நீர் சூழ்ந்த உலகத்தின் மக்கள் மகிழ்ச்சி அடைவதில்லை, மாறாக இன்சொல்லால் தான் மகிழ்கின்றனர். ஆதலால் இன்சொல் பேசுங்கள்.  


19. நல்லார் வரவு இன்பம் பயக்கும்

நல்லோர் வரவால் நகைமுகங்கொண் டின்புறீஇ
அல்லோர் வரவால் அழுங்குவார் - வல்லோர்
திருந்தும் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்துங் கழற்கால் வர. 



பொருள் விளக்கம்:-



வசந்த காலத்தில் வரும் குளிர்ந்த தென்றலைக் கண்டு மாமரம் மகிழ்ந்து பூ பூக்கும். ஆனால் வேனிர் காலத்தில் வரும் வெப்பக் காற்றில் மலரும் பூக்களும் காய்ந்து உதிரும். அது போல் நல்ல குணம் உடையவர் விருந்தினராக வரும் போது இல்லத்தில் இருப்பவர்கள் இன்முகத்துடன் வரவேற்று மகிழ்வர், அதற்கு மாறாக உள்ளவர் உள் நுழையும் போது தவித்து வருத்தப்படுவர்.

 
20. பெரியோர் பிறர் துன்பம் கண்டிரங்குவார்

பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவார் என்க - தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கழலுமே கண். 



பொருள் விளக்கம்:-

பிற உறுப்புகள் துன்பப்படும் போது, கண்கள் தனக்கு துன்பம் வந்தது போல் நீர் கசியும். அது போல் மேன்மை குணம் பொருந்திய பெரியவர்கள் பிறருடைய துன்பத்தைக் கண்டு தன் துன்பமாய் கருதி நெருப்பில் இட்ட மெழுகாய் வருந்தி அவர் துன்பம் போக்க வழி செய்வர்.


 
21. இலக்கணம் கல்லார் அறிவு கற்றார் அறிவுக்குமன் செல்லாது

எழுத்தறியார் கல்விப்பெருக்கம் அனைத்தும்
எழுத்தறிவார்க் காணின் இலையாம் - எழுத்தறிவார்
ஆயும் கடவுள் அவிர்சடைமுடி கண்டளவில்
வீயும் சுரநீர் மிகை. 



பொருள் விளக்கம்:-

பொங்கி வழிந்து பெருமிதப்படும் கங்கை, சிவபெருமானின் தலையில் சென்றவுடன் அமைதியாய் யாருக்கும் தெரியாமல் அடங்கி மறைந்து இருக்கும். அது போல் முறையாகக் கல்வியின் இலக்கணம் கற்காமல், கேட்டதை வைத்து பாவனையாகப் பேசும் கல்லா ஒருவன் சொல்லும் வார்த்தை கற்றறிந்த அறிஞர்கள் இருக்கும் சபையில் எடுபடாது.


 
22. அறிவுடையோர் உயர்குலத்தவர் அறிவிலார் இழிகுலத்தவர்

ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால்
மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்க
பவர்ஆர் அரவின் பருமணிகண்டு என்றும்
கவரார் கடலின் கடு. 



பொருள் விளக்கம்:-


பாம்பிடம் இருந்தாலும் ரத்தினத்தின் மதிப்பு குறைந்து விடாது, ஆழமாக அகலமாக இருந்தாலும் கடல் நீர் குடிக்கப் பயன் படாது. அதுபோல் உயர் குலத்தில் பிறந்தவன் என்பதால் ஒருவன் பெருமை மிக்கவனாக மாட்டான், தாழ் குலத்தில் பிறந்ததால் ஒருவன் சிறுமை படைத்தவனாக மாட்டான். ஒருவனின் பெருமை அவரவரின் அறிவைப் பொருத்துக் கொண்டாடப்படும்.

 
23. மனவுறுதி விடலாகாது

பகர்ச்சி மடவார் பயிலநொன்பு ஆற்றல்
திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும்பூரிக் கின்றமுலை பேதாய் பலகால்
எறும்பூரக் கல்குழியுமே. 



பொருள் விளக்கம்:-

எறும்புகள் ஊர்ந்து நடந்து சென்று சென்று கல்லும் தேய்ந்து வழித்தடம் ஆகும். அதுபோல் அழகிய தனங்களை உடைய பெண்களுடன் இருந்து பிரம்மச்சரியம் நோற்பது அவ்வளவு எளிதல்ல. பெரிய ஞானிகளும் மனத்திட்பம் இழப்பர். ஆகையால் நம் நோக்கத்திற்கு எதிராக இருக்கும் விசயங்களில் இருந்து விலகி மனஉறுதியுடன் இருந்தால் நினைப்பதை அடையலாம். 

 
24. ஓருவர்தம் நற்குணத்தையே பேசுதல் வேண்டும்

உண்டு குணமிங்கு ஒருவர்க்கு எனினும்கீழ்
கொண்டு புகல்வதவர் குற்றமே - வண்டுமலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பன்றோ
காக்கை விரும்பும் கனி. 



பொருள் விளக்கம்:-

அனைவருக்கும் நல்ல குணம் தீய குணம் என்று இரண்டு குணங்களும் இருக்கும். இவற்றின் அளவுகளைப் பொறுத்துத் தான் நாம் இவர் நல்லவர் என்றும், தீயவர் என்றும் முடிவு செய்கிறோம். தேனீக்கள் வேப்பம் பூவில் உள்ள தேனை அருந்தும், ஆனால் காக்கையோ கசப்பான வேப்பம் பழத்தை தேடி உண்ணும். அது போல் கீழ்குணம் உடைய மக்கள் ஒருவரின் குற்றத்தை பார்ப்பார், மேல் குணம் உடைய மேலோர் ஒருவரின் நல்ல குணத்தை பார்த்து அதை உணர்ந்து பாராட்டுவர்.


 
25. மூடர் நட்புக் கூடாது

கல்லா அறிவின் கயவர்பால் கற்றுணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம்
புணையில் புகுமொண் பொருள். 



பொருள் விளக்கம்:-

அதிக கணம் உள்ள கல் தெப்பத்தில் இருக்கும் போது எடையில்லாதது போல் மிதக்கும். அதுபோல் அறிவுள்ளவர்கள் கல்லாத அறிவில்லாத மூடர்களுடன் சேரும் போது மூடர்களாக கருதப்படுவர்.


 
26. உருவத்தால் சிறியவரும் அறிவினால் பெறியவராவார்

உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண்ணளவாய் நின்றதோ காணும் கதிரோளிதான்
விண்ணள வாயிற்றோ விளம்பு. 



பொருள் விளக்கம்:-


பூமியில் விழும் சூரியனின் ஒளியை வைத்து சூரியன் வெளிச்சமும், வெப்பமும் இவ்வளவு தான் என்று எடை போட முடியாது. அதுபோல் ஒருவரின் உருவத்தையும், எளிமையும் வைத்து அவர் படித்த கல்வியின் கடலை எடைபோட முடியாது. உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக் கூடாது.

 
27. அறிஞர்கள் கைம்மாறு வேண்டாமல் உதவுவார்கள்

கைம்மாறு கவாமல்கற் றறிந்தோர் மென்வருந்தித்
தம்மால் இயலுதவி தாம்செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று. 



பொருள் விளக்கம்:-


பெண்ணே, உணவை சிரமப்பட்டு மெல்வது பற்கள், ஆனால் சுவையை உணர்வது நாக்கு. எந்த ஒரு உதவியும் எதிபார்க்காமல் பற்கள் நாவிற்கு உதவி செய்கிறது. அது போல் நல்ல குணமுடைய கற்றறிந்த பெரியவர்கள், பதிலுதவி எதிர்ப்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்வர்.

 
28. அறிவுடையோர் கோபத்திலும் உதவுவார்

முனிவிலும் நல்குவர் முதறிஞர் உள்ளக்
கனிவிலும் நல்கார் கயவர் - நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்து
ஆயினும் ஆமோ அறை. 



பொருள் விளக்கம்:-


வாழைப்பழம் பழுக்கவில்லையென்றாலும் வாழைக்காய் சமையலில் உணவாகப் பயன்படும். ஆனால் எட்டிப் பழம் பழுத்தாலும் அதில் உள்ள கசப்பு போகாது, ஒருவருக்கும் பயன்படாது. அதுபோல் ஒருவருக்கொருவர் கோபப்பட்டு வருத்தமாக இருந்தாலும், நன்கு கற்ற மூதறிஞ்சர் ஒருவருக்கு உதவி தேவையெனின் மற்றொருவர் உடனே உதவி செய்வார். ஆனால் உள்ளத்தில் கள்ளத்தனம் உடைய கயவர்கள் நன்கு இனிப்பாக பழகி நம்முடன் உறவாடினாலும் ஒருவருக்கு உதவி தேவையெனின் மற்றொருவர் உதவி செய்யமாட்டார்.

 
29. ஆண்டவர் அடியார் எதற்கும் அஞ்சார்
உடற்கு வருமிடர் நெஞ்சோங்கு பரத்துற்றோர்
அடுக்கும் ஒருகோடியாக - நடுக்கமுறார்
பண்ணின் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணில் புலியைமதி மான். 



பொருள் விளக்கம்:-

அழகாக பாடலில் ஓசை போல் அடுத்தவர் மனம் குளிரும்படி இனிதாக பேசும் பெண்ணே, சிவனின் தலையில் இருக்கும் மூன்றாம் பிறைச்சந்திரனுக்கு அருகில் இருக்கும் மான், பூமியில் உலவும் புலியைப் பார்த்து அச்சப்படாது. அதுபோல் இறைவனை முழுதும் நம்பி அவரை இதயத்தில் இருத்தியவர் உடலில் வரும் துன்பத்தை கண்டு அஞ்சமாட்டார். 

 
30. இறப்புக்குமுன் அறம்செய்க

கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளம் கனிந்தறம்செய் துய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வேயார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு. 



பொருள் விளக்கம்:-


மழைவெள்ளம் ஊரைத் தாக்காமல் இருக்க அணையை மழைக்காலம் முன்பே கட்டி இருக்க வேண்டும். மழைபெருகி வெள்ளமாக வரும் வேளையில் அணைகட்டி ஊரை காப்பாற்ற முடியாது. அதுபோல் கொடும் கூற்றாகிய எமன் வந்து நம்மை கொலை செய்யும் முன் உள்ளம் குளிர்ந்து அறம் செய்க.


31. பிறர் துன்பம் தாங்குக

பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவர் - நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கைசென்று தாங்கும் கடிது. 


பொருள் விளக்கம்:-

அழகிய ஆபரணத்தை உடைய பெண்ணே, ஒருவர் உடலை கோலால் அடிக்க முயலும் போது , அடி உடலில் பாடாமல் இருக்க கை விரைந்து சென்று அடியை தடுக்க முயலும். அதுபோல் வீரம் நிறைந்த பேரறிஞ்சர் பிறர் துயரப்படும் போது அவர் துன்பப்படாமல் இருக்க விரைந்து சென்று அவரை காப்பர். 

 
32. பகுத்தறிவற்றவர் அறங்கள் பயன்படா

பன்னும் பனுவல் பயந்தோர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்
காழென்று உயர்திண்கதவுவலியுடைத்தோ
தாழென்று இலதாயின் தான். 



பொருள் விளக்கம்:-

அழகிய வைரம் போல் உறுதியுடன் ஒரு கதவு இருப்பினும் சிறிய தாழ்ப்பாள் இல்லையென்றால் அந்த கதவு உறுதி உடைய கதவு என்று சொல்லுவது சரியாகுமோ. அதுபோல் நல்ல நூல்கள் கற்காமல் யாருக்கு என்ன உதவி செய்யவேண்டும் என்ற வரைமுறை அறியாத பகுத்தறிவற்றோர் செய்யும் அறங்கள் சமுதாயத்துக்கு பயன்படாது.  

 
33. பெரியோர்க்குப் பாதுகாப்பு வேண்டுவதில்லை

எள்ளா திருப்ப இழிஞர் போற்றற்குரியர்
விள்ளா அறிஞரது வேண்டாரே தள்ளாக்
கரைகாப் புளதுநீர் கட்டுகுளம் அன்றிக்
கரைகாப்புளதோ கடல். 



பொருள் விளக்கம்:-


பிறர் ஏளனம் செய்யாமல் இருக்க குணங்களால் சிறியவர் தங்களின் தோற்றத்தை எப்போதும் மேம்படுத்தற்குரியவர் ஆவார். ஆனால் கல்வி கற்ற அறிஞர்கள் தங்களின் தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. சிறிய நீரைத் தாங்கி இருக்கும் குளத்துக்கு கரை அவசியம். ஆனால் பெரிய நீரைத் தாங்கி இருக்கும் கடலுக்கு கரை அவசியமில்லை.

 
34. அறிவுடையவர் பழிக்கு அஞ்சுவர்

அறிவுடையா ரன்றி அதுபெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
கண்ணஞ்சுமோ இருளைக்கண்டு. 



பொருள் விளக்கம்:-


அறிவுடையவராகாமல், அவ்வறிவைப் பெறாதவர் தன்னை நோக்கி வரும் பழி குறித்து அஞ்சமாட்டார்கள். ஆனால் அறிவுடையவர் தன் மேல் வரும் பழிக்கஞ்சுவர். சந்திரனின் பிறை போல் அழகிய நெற்றியை உடைய பெண்ணே, வண்ணத்தை செய்யும் ஒளி பொருந்திய வாள்விழியே இருட்டைக் கண்டஞ்சும், ஒளி மறைந்த குருட்டுக்கண்கள் இருட்டை கண்டு அஞ்சாததைப் போல்.

 
35. மேன்மக்கள் அறிவுடையோரையே விரும்புவர்

கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர்தாம் என்றும் மதியாரே - வெற்றிநெடும்
வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி
பால்வேண்டும் வாழைப்பழம். 



பொருள் விளக்கம்:-

கற்ற அறிவுடையவரை மேன்மக்கள் என்றும் விரும்பி நட்புக் கொள்வர். மற்றையோர் அவர்களின் மேன்மையை மதியார். வெற்றியைத் தரும் வேல் போன்ற விழியை உடையவளே புளிக்குழம்பு வாழைப்பழத்துடன் சேராது. பால் வாழைப்பழத்துடன் சேருவதைப் போல். 

 
36. தக்கார்கே உதவுக

தக்கார்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்லென்று
மிக்கார்குதவார் விழுமியோர் - எக்காலும்
நெல்லுக்கு இரைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புலலுக்கு யிரைப்ரோ போய். 



பொருள் விளக்கம்:-


எந்தக் காலத்திலும் நெல்லுக்குத் தான் நீரிரைப்பார், அதைவிடுத்து காட்டில் வளரும் புல்லுக்கு யாரும் நீரை இறைக்க மாட்டார்கள். அதுபோல் தகுதியவருக்கு கொடுப்பார். தகுதியற்றவருக்கு கொடுக்கமாட்டார். நல்ல நெறிகள் இல்லாதவருக்கு கொடுக்க மாட்டார் மேலோர்.


 
37. பெரியேர் முன் தன்னை புகழலாகாது
பெரியோர் முன் தன்னைப் புனைந்துரைத்த பேதை
தரியா துயர்வகன்று தாழும் - தெரியாய்கொல்
பொன்னுயர்வு தீர்த்த புணர் முலையோய் விந்தமலை
தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து. 



பொருள் விளக்கம்:-

பொன் கொடுக்கும் மகாலக்ஷ்மியை அழகால் தோற்கடிக்கும் வண்ணம் அழகிய தனங்களுடைய பெண்ணே, தெரிந்துகொள் விந்தியமலை அகத்தியரின் முன் தன் பெருமையை பேச, அவர் காலின் கட்டைவிரல் பட்டு பூமியில் மறைந்து பாதாளம் சென்றது. அதைப்போல் நன்கு கற்ற பெரியவர்முன் தற்பெருமை பேசிய பேதையின் பெருமையின் உயர்வு அவன் அறியாமல் தாழ்ந்து போகும்.  
 
38. நல்லார் நட்பு நன்மை பயக்கும்

நல்லார்செயுங் கோண்மை நாடோறும் நன்றாகும்
அல்லார்செயுங் கேண்மை ஆகாதே - நல்லாய் கேள்
காய்முற்றின் தினதீங் கனியாம் இளந்தளிர்நாள்
போய்முற்றின் என்னாகிப் போம். 



பொருள் விளக்கம்:-

நல்ல குணம் உடைய பெண்ணே, சொல்வதைக் கேள். காய் முற்றினால் தேன் சுவையைப் போல் சுவையான பழமாகும். ஆனால் பசுந்தளிர் முற்றினால் கசக்கும். அதைப்போல் நல்லவருடன் செய்யும் நட்பானது நாளாக நாளாக நாடு போற்றும் நன்மையைச் செய்யும். ஆனால் தீயவருடன் செய்யும் நட்பானது தீமையைத்தான் செய்யும்.
 
 
39. மூடர் நட்பு கேடு தரும்

கற்றறியார் செய்யுங் கடுநட்பும் தாம்கூடி
உற்றுழியுந் தீமைநிகழ் யள்ளதே - பொற்றொடிஇ
சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த
அன்றே மணமுடைய தாம். 



பொருள் விளக்கம்:-


 
40. புலவர்களுக்கு அரசர்களும் ஒப்பாகார்

பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தாம் மற்றெவ்வார் - மின்னுமணி
பூணும் பிறவுறுப்புப் பொன்னே அதுபுனையாக்
காணும் கண்ணொக்குமோ காண். 


 

பொருள் விளக்கம்:-

  பொன் போன்றவளே, உடலில் உள்ள உறுப்புகள் மின்னுகின்ற பல ரத்தினங்கள், தங்கம் அணிந்து அழகாகக் காட்சி அளித்தாலும், எதையும் அணியாத கண்களுக்கு ஒப்பாகாது. அது போல் தங்க ஆபரணங்கள் பல அணிந்து வசதியுடன் இருந்தாலும், அழியாத கல்வி கற்ற அறிஞர் முன் அரசர்கள் ஒப்பாகமாட்டார்கள்.

***நன்னெறி இனிதே நிறைவுபெற்றது***

தொகுப்புரை:-

நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நன்னெறி என்னும் இந்த நூல் மக்கள் வாழ்க்கைக்கு உரிய நல்ல நெறிகளைத் தொகுத்துக் கூறுகிறது.

நல்ல நட்பின் பெருமையையும், நட்பில் பிரிவு கூடாது என்னும் அறிவுரையையும் சிவப்பிரகாசர் விளக்கியுள்ளார்.

இனிமையான சொற்களைப் பேசுவதால் ஏற்படும் நன்மைகளையும் கொடிய சொற்களைப் பேசுவதால் ஏற்படும் தீமைகளையும் நன்னெறி தெரிவித்துள்ளது. மேலும் நல்ல பண்பாளர்கள் சொல்லும் வன்சொல்லும் நன்மையைத்தான் தரும் என்றும் தெரிவித்துள்ளது.

கல்வியின் சிறப்பைப் பற்றியும், கற்றவர்களின் புறத்தோற்றத்தை வைத்து அவர்களின் அறிவுத் திறத்தை எடை போடக் கூடாது என்பதைப் பற்றியும் சிவப்பிரகாசர் கூறியுள்ளார்.

அறிஞர்களின் பெருமையையும் மன்னனை விடவும் அறிஞர்கள் மதிக்கப்படுவதையும் நன்னெறி வழியாக நாம் அறிய முடிகிறது.

பெரியோர்கள் புகழ்ச்சியில் மயங்குவதில்லை என்பதையும், அவர்கள் பிறருக்கு ஏற்பட்ட இன்னலைக் கண்டு உள்ளம் வருந்துவார்கள் என்ற உண்மையையும் சிவப்பிரகாசர் தெரிவிக்கிறார்.

உதவி செய்து வாழ வேண்டிய தேவையையும், உதவி செய்யும் போது பயன்கருதாமல் உதவி செய்ய வேண்டும் என்பதையும், சமுதாயத்தில் தீயவர்களாகக் கருதப்படுகிறவர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்பதையும் நன்னெறி உணர்த்துகிறது.

கல்வியாலும், செல்வத்தாலும் ஆணவம் கொள்ளக்கூடாது. அவ்வாறு ஆணவம் கொண்டவர்கள் கல்வியையும் செல்வத்தையும் இழக்க நேரிடும் என்றும் நன்னெறி அறிவுரை கூறியுள்ளது.




 

தொகுப்பு :-

சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
மயிலம் - 604 304.
விழுப்புரம் மாவட்டம்,  
தமிழ்நாடு - இந்தியா.