Search This Blog

Tuesday, February 28, 2023

விவிலியத்தில் அறம் சார்ந்த சிந்தனைகள்

 

விவிலியத்தில் அறம் சார்ந்த சிந்தனைகள்


செ.சத்யா

முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்,

கலை, அறிவியல் கல்லூரி,

மயிலம் - 604 304. விழுப்புரம் மாவட்டம்.

தமிழ்நாடு - இந்தியா.

மின்னஞ்சல் : sathyasenthil77@gmail.com

ORCID ID: 0000-0001-7111-0002

 

முன்னுரை

            தமிழில் தோன்றிய அற இலக்கியங்கள் ஒரு மனிதன் தன் வாழ்வில் பின்பற்றத்தக்க வாழ்வியல் நெறிகளை எடுத்துரைக்கின்றன. இவற்றின் நோக்கம் பெரும்பாலும் உலக உயிர்கள் மனிதப் பண்புகளுடன் வாழ்தல் வேண்டும் என்ற நெறிகளை கொண்டதாக அமைகின்றது. கிறித்துவத்தினைப் பின்பற்றி வாழ்பவர்கள் 'விவிலியத்தினை'ப் புனித நூலக கருதுகின்றனர். சமயங்கள் யாவும் மனிதர்களிடையே அருட்பணியினையும், நேரிய ஒழுக்கத்தினையும் கற்பிக்கின்றன என்பதனை மறுப்பாரிலர். பல்வேறு பெயர்களில் சமயத்தின் நிலைகள் காணப்பட்டாலும், இவற்றிற்குள்ளே மனிதநேயம், உயிர்களுக்கிடையே அருள் பாராட்டுதல், சமூகத்தின் நலனுக்காக வாழ்கின்ற தியாக உணர்வு போன்ற அறக்கருத்துக்கள் பெரிதும் வலியுறுத்தப்படுகின்றன. கிறித்தவ சமயத் திருநூலக விளங்கும் திருவிவிலியத்துள் இடம்பெற்றுள்ள அறக்கருத்துக்களை எடுத்தியம்பும் வகையில் இவ்வாய்வு அமைகின்றது

விவிலியம் - சொல்லும் பொருளும்

            கிறித்தவர்களின் புனித நூல் 'திருவிவிலியம்' என அழைக்கப்படுகிறது. திருவிவிலியம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்னும் இரு பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளன. பழைய ஏற்பாட்டில் 39 தனித்தனியான நூல்களும், புதிய ஏற்பாட்டில் 27 தனித்தனி நூல்களும் அடங்கியுள்ளன. பழைய ஏற்பாட்டில் முதல் நூலான தொடக்க நூலிலிருந்து புதிய ஏற்பாட்டின் இறுதி நூலான திருவெளிப்பாடு என்னும் நூலக்குமிடையே 1500 ஆண்டுகள் கால இடைவெளி உண்டு என்று கருதுவர். விவிலியம் என்னும் தமிழ்ச்சொல் பைபிள் என்னும் சொல்லிலிருந்து மொழிப் பெயர்க்கப்பட்டது. பைபிள் என்ற வார்த்தை கிரேக்கச் சொல்லான பிப்லியா என்னும் சொல்லிலிருந்து தோன்றியதாகும். இச்சொல்லுக்கு நூல் என்பது பொருளாகும்.

 இறை நம்பிக்கை

            வாழ்கிற வாழ்க்கையில் அனைத்து மக்களும் ஏதோ ஒருவகையில் இறை நம்பிக்கையைச் சார்ந்துள்ளனர். தீயவழிக்குச் செல்லாதவாறு இறை நம்பிக்கை அமைந்துள்ளது. இதனை விவிலியம்,

"நீ எதைச் செய்தாலும் ஆண்வரை மனதில் வைத்துச் செய்

அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்"1 

என்று எடுத்தியம்புகின்றது.

 நாவடக்கம்

            மனிதன் எண்ணங்களையும், உணர்வுகளையும் கருத்துவடிவில் மனிதருக்குள்ளிருந்து வெளிக்கொணர்வது 'நாவாகும்'. முனித உறுப்புகளில் அதிகாரமும், வன்மையும் வாய்ந்த உறுப்பு நாவாகும். இந்நாவினால், எந்த கருத்தையும் மாற்றியும் மொழியலாம்; திரித்தும் கூறலாம். ஆகையால் தான் வள்ளுவர் எதை அடக்காமற் போயினும் நாவைச் சொற்குற்றங்களுக்க விலக்கி காப்பது மிகமிக இன்றியமையாத ஓர் ஒப்புயர்வற்ற அறமாகும் என்கிறார். இவ் நாவடக்கத்தை விவிலியமானது,

"நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி"2 

தீட்டப்பட்ட சவரகன் கத்தி"3  

"கருக்காளப் பட்டயம்"4

"பூமியெங்கும் உலாவும் தன்மையுடையது"5

"சர்ப்பத்தைப் போன்றது"6  

“மரணத்தையும் ஜீவனையும் விளைவிக்கக் கூடியது"7 

"பட்சிக்கிற அக்கினிப் போன்றது"8

"கூர்மையாக்கப்பட்ட அம்பு போன்றது"9

என்று குறிப்பிடுகின்றது.

இதன் மூலம் நாவின் பல்வேறு தன்மைகளையும், அதன் தீவிரம், திறம், வன்மை போன்றவற்றை அறியலாம். நாவினால் ஒரு மனிதனைக் கொள்ளவும் முடியும், கொல்லவும் முடியும் என்கிற உண்மையை இத்தொடர்கள் விளக்குகின்றன. மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது என்பது விளக்கப்பட்டுள்ளது. எனவே, நாவை தீமைக்கும், கொடுமைக்கும் விலக்கி, அடக்கிக் காப்பது இன்றியமையாத அறமாக விவிலியம் விளம்புகின்றது.

இனியவை கூறல்

கேட்போர் உள்ளத்தில் இன்பம் தரும் வகையில் உரையாடி மகிழ்தலே இனியவை கூறலாகும். இதனை விவிலியம்,

"இன் சொற்கள் மனதிற்கு இனிமையானவை

தேன்கூடு உடலுக்கு நலம் தருபவை"10

"இனிய நாவு எலும்பை நொறுக்கும்"11

என்று இனியவை கூறலின் மேன்மையை எடுத்துரைத்துள்ளன.

அறிவுடைமை

            அறிவுடையவர் ஒருவருக்கு நிகராக ஆயிரம் அறிவில்லாதவர் கூடினாலும் சமமாக முடியாது. அறிஞரே செயல்திறன் இல்லாதவரையும் அரவணைத்து அனைத்துச் செயல்களையும் நிறைவேற்றுவார். எனவே அறிவுடைமை அனைத்து மாந்தர்களுக்கும் இருக்க வேண்டிய தனிப்பெருஞ் செல்வமாகும் என்பதனை,

"ஞானத்தைத் தேடி அடைந்தவன் நற்பேறு பெற்றவன்

மெய்யறிவை அடைந்தவன் நற்பேறு பெற்றவன்"12

"ஞானத்தையும் மெய்யுணர்வையும் தேடிப்பெறு

நான் சொல்வதை மறந்து விடாதே அதற்கு மாறாக நடவாதே"13

என்று அறிவுடைமையாகிய ஞானத்தைப் போற்றியுள்ளது விவிலியம்.

அன்புடைமை

            மானுட வெற்றியின் அடிப்படை அன்பு ஆகும். அன்பு ஓர் உயிர்ப்பண்பு ஆகும். அன்பைத் தந்தாலும் இன்பம்! பெற்றாலும் இன்பம்! அன்பு பற்றி கூறாத அற நூலில்லை, அன்பு பற்றி எடுத்துரைக்காத சமயமும் இல்லை எனலாம். அறநூல்களும், விவிலியமும் அன்பினை மிக உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பிடுகின்றன. விவிலியமும் இறைவன் அன்புருவம்; பேரின்பமும் அவனே. எனவே, அன்புள்ளவர் இறைவனை அறியலாம், மேலோகப் பேற்றையும் பெறலாம் என சுட்டியுள்ளதை,

"அன்பில்லாதவன் தேவனை அறியான்;

தேவன் அன்பாகவே இருக்கிறார்"14

என்றும், இறைவன் அன்புருவாய் இருப்பதால், அன்பில்லாத நிலையில் ஒருவர், இறைவனை அறிந்து கொள்ள முயலுதலும் கடினமாகும். அன்புள்ளவரே அன்புருவான இறைவனை அறிந்து வழிபட இயலும் என்கிறது விவிலியம்.

மனவடக்கம்

            இறைவன் மனிதனுக்குள் படைத்த அருவப் பொருட்களுள் மனமும் ஒன்று. இம்மனம் மனிதனை மகானாகவும் மாற்றும்; மிருகமாகவும் மாற்றும். எனவே, மனத்தின் ஆளுமையைக் கட்டுப்படுத்திச் சீராக வைக்கும் போதே மனிதன் மனமுள்ளவனாகத் திகழ்கிறான். மனத்தை அடக்கி வாழமுடிந்த மனிதனே சிறந்த மனிதனாகத் திகழ்வான் என்பதனை விவிலியமும் பெரிதும் வற்புறுத்திக் கூறுவதைக் காண முடிகிறது. மனிதருக்குள்ளிருந்தே எல்லா வகைபாவங்களும் வெளிப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்துவதாக விவிலியம் சுட்டுகின்றது. எனவே அம்மனத்தை அடக்கி மனிதர் தீட்டுப்படாதவாறு கட்டுப்படுத்த வேண்டுமென்பதை,

"பட்டணத்தைப் பிடிக்கின்றவனைப் பார்க்கினம் தன் மனதை

அடக்குகிறவன் உத்தமன்"15

என்ற பாடல் வரிகளில், போர் செய்து ஒரு நாட்டைத் தன் வசப்படுத்தும் அரசனிலும், தன் மனதை அடக்கி வசப்படுத்திக் கொள்கின்றவன் சிறந்தவனாகக் காணப்படுகிறான் என விவிலியம் மனவடக்கத்தின் சிறப்பபைக் கூறுகின்றது. மேலும்,

"எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக் கொள்

அதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்"16

என்று மனதை அடக்குவதால் ஏற்படும் நன்மையைக் கூறி, மனவடக்கத்தின் இன்றியமையாமையை விவிலியம் எடுத்துரைக்கின்றது.

 வாய்மை

            உண்மையான இயல்பு கூறுதல் வாய்மையாகும். 'வாய்மையிற் சிறந்த சமயமில்லை' என்பது காந்தியடிகளின் கூற்றாகும். சமயங்கள் அனைத்தும் வாய்மையென்னும் அடிக்கல்லின் மேல் கட்டப்பட்டுள்ளன. வாய்மையின் மேல் கட்டப்படாத வாழ்வு சிறப்பதில்லை; அது வளம் பெறுவதும் இல்லை என்பதனை விவிலியம்,

"உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதார

சத்தியத்தைப் பேசுகிறவன்"17

"சத்திய வாசகன் நீதியை வெளிப்படுத்துவான்"18

சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்"19

என்று பல்வேறு சூழல்களில் கூறப்படும் வாய்மையைப் பற்றி விரிவாக விவரிக்கின்றன. இங்கே வாய்மையே நிலைபேறுடைய நீதியாக விவிலியம் விளக்குகின்றது. வாயில் சத்தியம் .இருக்க வேண்டும். சத்தியம் என்பது ஒன்றை உறுதியாக அறுதியிட்டு கூறுவதைப் பற்றி விளக்குகின்றன.

"சத்தியத்திற்க விரோதமாய்ப் பொய்சொல்லாமலும் இருங்கள்"20

"பொய்யைக் களைந்து, அவனவன் மெய்யைப் பேசக்கடவன்"21

எனக் கூறுவது திருவள்ளுவரின் 'பொய்யாது மொழிதலே வாய்மை' எனும் கருத்தை விளக்குவதாய் உள்ளது.

"சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்"22

எனச் சத்தியத்தை (உண்மை) உள்ளம் அறியும் போது, பொய் போன்ற குற்றங்களிலிருந்து இவ்வுண்மை ஒரு மனிதனை விடுவிப்பதாக விவிலியம் விளம்புவதைக் காண முடிகின்றது. உள்ளத்தில் அமைகின்ற இவ்வுண்மை அறத்தைப் பற்றி,

"நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது

ஜீவகீரிடத்தை உனக்குத் தருவேன்"23

என்று உண்மையாய் இருப்பது ஒவ்வொரு தனிமனிதர்களும் இறுதிவரை பின்பற்ற வேண்டிய அறமாக விவிலியம் உணர்த்துவதை அறிந்து கொள்ளலாம்.

முடிவுரை

            விவிலியம் இறை நம்பிக்கையைப் போற்றியுள்ளன. இறைவன் ஒருவனே அனைத்துப் பாவச் செயல்களில் இருந்தும் விடுப்பான் என்பதையும், இறைவனை சரணாகதி அடைவோர்க்கு துன்பமில்லை என்பதினை அறமாக எடுத்துரைத்துள்ளது. அளவறிந்து இனிமையுடன் பேசுதலை இன்றியமையாத அறமாகக் கொண்டு நாவடக்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உடல் அழிந்து விடும் உயிர் மட்டுமே நிலையானது. இறந்தும் மனங்களில் உயிர்வாழ்தலை விவிலியம் அழகாக எடுத்துரைக்கின்றது. மேலும், எச்சூழலிலும் ஒருவருக்கு வாய்மையே இன்றியமையாத அறம் என்று விவிலியம் எடுத்துரைக்கும் கருத்தாக அமைந்துள்ளது. அன்பே அறங்களுக்கு அடிப்படை என்றும், அன்பு மனிதர்க்கு உயிர் போன்றது என்றும், அன்பிலா நிலை உயிரில்லாத பயனில்லாத நிலைக்கு இணையானதென்னும் கருத்துக்களையும், என்றும் மாறாத இயல்புடையதும், அழியாததும், ஒறுத்தாரையும் மன்னிக்கும் இறையன்பினை விவிலியம் வாழ்வின் நெறிமுறைகளாக தெளிவாக எடுத்துரைக்கின்றது.

 

சான்றென் விளக்கம்

1.    நீ.மொ.3:6

2.    சங்.45:1

3.    சங்.52:2

4.    சங்.57:4

5.    சங்.73:9

6.    சங்.140:3

7.    நீ.மொ.18:21

8.    ஏசா.30:27

9.    எரே.9:8

10.  நீ.மொ.16:24

11.  நீ.மொ.25:25

12.  நீ.மொ.3:15

13.  நீ.மொ.4:5

14.  யோவான்4:8

15.  நீ.மொ.16:32

16.  நீ.மொ.4:23

17.  சங்.15:2

18.  நீ.மொ.12:17

19.  நீ.மொ.12:19

20.  யாக்.3:14

21.  எபே.4:25

22.  யோவா.8:32

23.  வெளி.2:10

 

துணை நூற்பட்டியல்

1.    ஞான சந்திர ஜான்சன், யோ., கிறிஸ்தவ இலக்கியத் திறன், கீர்த்தனா பதிப்பகம், கிழக்குத் தாம்பரம், சென்னை, 2012.

2.    கிருஷ்ணபிள்ளை, எச்.ஏ., இரட்சணிய யாத்திரிகம், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை, இரண்டாம் பதிப்பு 1931.

3.    காமாட்சி சீனிவாசன், திருக்குறளும் விவிலியமும், பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை, 1979.

4.    தாவீது அதிசயநாதன், எஸ்., தமிழ் வரலாற்றில் கிறிஸ்தவம், உலகக் கிறிஸ்தவத் தமிழ் பேரவை, தெ.இ.திருச்சபை, வேலூர், 1983.

5.    அருள்சாமி, ச.இ., விவிலியம் வளர்ந்த வரலாறு, நல்லாயன் கல்லூரி, மைலேறி பாளையம், கோவை, முதற்பதிப்பு 2000.

6.   இன்னாசி, சூ., கிறிஸ்தவத் தமிழ்க் கொடை, மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.

No comments:

Post a Comment