Search This Blog

Wednesday, March 24, 2021

குறுந்தொகையில் உள்ளுறை - இறைச்சி

குறுந்தொகையில் உள்ளுறை - இறைச்சி


செ. சத்யா

முனைவர் பட்ட ஆய்வாளர்

தமிழ்த்துறை

ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி,

மயிலம் - 604 304.

மின்னஞ்சல்   : sathyasenthil77@gmail.com

 

ஆய்வு நெறியாளர்

முனைவர். .சதீஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மயிலம் தமிழ் கல்லூரி. 


முன்னுரை

            தமிழில் தோன்றிய இலக்கியங்களில் சங்க இலக்கியமும் ஒன்று. சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் பல்லாண்டு காலமாக வாசிக்கப்பட்டு வரும் செவ்விலக்கியங்கள் ஆகும். அவற்றுள் குறுந்தொகையில் மனிதனின் அக உணர்வுகளை இயற்கையோடு இரண்டறக் கலந்து கூறப்படுகின்றன. அகப்பாடல்களில் எண்ணங்களையும், உணர்வுகளையும் நேரடியாகச் சொல்லிவிடாமல் இலைமறைகாயாய் இயற்கையோடு வெளிப்படுத்தினர். தலைவன் தலைவியிடையே ஏற்படும் அக உணர்வுகளை சங்கப்புலவர்கள் குறிப்புப் பொருள்களால்; உணர்த்த உள்ளுறை, இறைச்சி என்னும் உத்திகளை  பெரும்பாலும் கையாண்டுள்ள திறத்தை விளக்குவதாக இவ்வாய்வு அமைகின்றது.

ஆய்வுச் சுருக்கம்

தமிழிலக்கிய ஆய்வுக்களம் வரலாற்றுச்  சிறப்புமிக்கது. சங்க இலக்கியம் பண்டைத் தமிழர்களின் நாகரிகம், மொழிச்சிறப்பு முதலானவற்றை அறிந்துக் கொள்ள விரும்புவோருக்குச் சான்றாகவும், செய்தி ஊற்றாகவும் அமைகின்றது. இவ்விலக்கியங்கள் தமிழர்கள் வகுத்த அகம், புறம் என்னும் பொருள் வகையினை விளக்குகின்றன. சங்ககாலப் புலவர்கள், சங்கப் பாடல்களில் அக உணர்வை மறைமுகமாக, குறிப்பாக  உணர்த்த, உள்ளுறை உவமை, இறைச்சி என்னும் இலக்கிய உத்திகளை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளனர். இவை இரண்டையும் "குறிப்புப் பொருள் உத்தி" எனவும் அழைப்பர். தமிழிலக்கியத்தில் இலக்கியக் கொள்கையை உருவாக்கியவர் தொல்காப்பியர். அந்த வகையில்; குறுந்தொகைப் பாடல்களில் பயின்று வந்துள்ள குறிப்புப் பொருளான உள்ளுறை, இறைச்சியை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

திறவுச் சொற்கள்:

உவமம், உள்ளுறை உவமம், இறைச்சி, குறுந்தொகை, தொல்காப்பியம், உத்தி, பொருள் புலப்பாடு, குறிப்புப் பொருள், அகஉணர்வு.   

உள்ளுறை உவமம்

                        "உள்ளுறை உவமம் ஏனைய உவமம்எனத்

                   தள்ளா தாகும் திணைஉணர் வகையே"1 

"உள்ளுறுத்து இதனொடு ஒத்துப்பொருள் முடிகென

உள்ளுறுத்து  உரைப்பதே உள்ளுறை உவமம்" 2

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக்

கொள்ளும் என்ப குறியறிந் தோரோ" 3

உள்ளுறை உவமம்  தெய்வம் நீங்கிய பிற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றுவது. வெளிப்படையாகக் கூறப்படும் உவமத்தினைக் கொண்டு வெளிப்படையாகக் கூறப்படாத உவமிக்கப்படும் பொருள் ஒத்து முடியும்  வகையில் கவிஞன் தான் கருதிய பொருளை உட்பொதிந்து பாடுவான்.

சிறைப்புறமாய் நிற்கும் தலைவன் விரைவில் வரைய வேண்டும் எனும் எண்ணத்தில் இயற்பழிக்கும் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்த துறையில் உள்ளுறை உவமம் ஒளிர்தலை,

"கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே"4

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. இப்பாடலில் குறிஞ்சிப்பூ, தேன் முதலியன கருப்பொருள்கள். வண்டுகள் குறிஞ்சிப் பூவில் திகழும் தேன் துளிகளை ஈட்டிக் கொணர்ந்து, கூட்டிலமைக்கும் நாட்டுத் தலைவனின் நட்பினைப் பாராட்டிப் பேசுகிறாள் தலைவி.

            இரவுக்குறி வேண்டிய தலைவனுக்கு உடன்படுவது போல உள்ளுறை உவமத்துடன் மறுத்துரைக்கும் தோழியின் பாங்கினை கபிலர் பாடிய,

"காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்

கருவி மாமழை வீழ்ந்தென அருவி

விடகரத்து இயம்பும் நாடஎம்

தொடர்பும் தேயுமோ நின் வயினானே"5                 

என்ற குறுந்தொகைப் பாடல் அடிகள் உள்ளுறை உவமத்தின் சிறப்பினை எடுத்துரைக்கின்றன. இப்பாடலடிகள், அனைவரும் துயிலும் யாமத்தில் மழை பொழிந்ததாயினும், அதனால் பெருகிய வெள்ளம், மழைப்பொழிவை அறியாதார்க்கும் அறியக்காட்டி மலைப் பிளவுகளில் முழங்கும். அதுபோல் தலைவன் இரவுக்குறியில் தலைவியை எதிர்ப்பட்டுக் கூடிப்பிரியினும், அதனால் விளையும் தலைவியின் மெய் வேறுபாடு பின், பலராலும் அறியப்பட்டு அலர் தூற்றப்படும் என்று தோழி உள்ளுறையுடன் எடுத்துரைப்பதாக அமைகிறது.

பல்வேறு குறிஞ்சிப்பூக்களில் காணப்படும் நறுந்தேனின் சேமிப்பு வண்டுகளின் முயற்சியால் தேனடையில் தொகுக்கப்படுதல் போல், பல்வேறு பிறவிகளில், தலைமக்கள் பயின்று வந்த அன்புப்பெருக்கின் திரட்சியே இப்போது இருவர்க்கும் ஏற்பட்டிருக்கும் காதலாக உருப்பெற்றுள்ளது. பரத்தையரினின்றும் பிரிந்து வந்த தலைமகனை நெருங்கிச் செல்லும் தலைவியின் பேச்சில் ஔவையார் அமைத்துள்ள உள்ளுறையினை,

"அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி

குண்டுநீர் இலஞ்சிக் கொண்ட கதூஉம்

தண்டுறை யூரன்"6

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்தியம்புகின்றன. இப்பாடல் அடிகளில் நீரில் தோன்றாது நிலத்தில் தோன்றிய பிரப்பங்கனியை நீரில் வாழும் கெண்டை தின்னும், அதுபோல் நற்குடியில் பிறந்த தலைவனின் நலனைக் குடிப்பிறப்பில்லாப் பரத்தையர் நுகர்வர் என்பதனை, பிரம்பின் கனி மற்றும் இலஞ்சிக்கெண்டை இரண்டையும் கருப்பொருளாகக் கொண்டு தலைவனின் நலம் என்பதனை உள்ளுறையாக கையாண்டுள்ளதை எடுத்துரைக்கின்றன.

இறைச்சி

            இறைச்சி என்பது கருப்பொருளின் சிறப்புகளைக் கூறுவதன் மூலம் பிறிதொரு கருத்தை உணர்த்துவதாகும். இதனை, "இறைச்சி தானே உரிப் புறத்ததுவே"7 என்கிறார் இளம்பூரணர். இதற்கு  உரிப்பொருள் இல்லாத பொருள்களைக் கொண்டு இறைச்சிப் பொருள் அமையும் என்பது விளக்கமாகும்.

            "இறைச்சி தானே பொருட் புறத்ததுவே"8 என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார். இதனால் கருத்துப் பொருளோடு குறிப்புப் பொருளும் உணர்த்தப்படும் வகையில் அமைவது இறைச்சியாகும்.

கூற்று, உரிப்பொருள் என்பது மாந்தர் தம் காதல் உணர்வு. இவ்வுணர்வுக்குப் புறத்தாய் அமைந்து இன்பத்தை மிகுவித்தலாகும். எனவே, கருப்பொருளின் செயலைக் கூறி, காதல் வாழ்வை மிகுவிக்கும்படியான பிறிதொரு பொருளைக் கூறுவது அல்லது சொல்லிய சொல்லிலும் நேரடியாகப் புலப்படுத்தாமல் அவற்றிற்கு அப்பாற் நின்று மறைவாகப் பொருள் சுட்டும் நெறியே 'இறைச்சி'யாகும்.

            இறைச்சி பொருள் புறத்தே தோன்றும் பொருள் என்றும், அது நுட்பமாக ஆராய்வோர்க்கே புலப்படும் என்பதைத் தொல்காப்பியர்,

"இறைச்சியிற் பிறக்கும் பொருளுமார் உளவே

                        திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே"9

என்று தனது நூற்பாவின் மூலம் எடுத்துரைக்கின்றார். மேலும்,          

                        "அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும்

                   வன்புறை யாகும் வருந்திய பொழுதே"10

                   "ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்"11

என்ற தொல்காப்பிய நூற்பாக்களும் இறைச்சியை எடுத்துரைக்கின்றன. இவ்வாறாக வரும் நூற்பாக்களை நன்கு ஆராய்ந்து பார்த்தால் மனித நேயத்தைப் போலப் பறவைகள், விலங்குகள், ஓரறிவு உயிர்களிடையே காணப்படும் காதலுணர்வை – அன்புணர்ச்சியை எடுத்துக் காட்டுவதே 'இறைச்சி' என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

            தலைவன் விரைவில் நாடு திரும்பி வந்திடுவான் என்று கூறித் தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, யானையின் செய்கையின் மூலம் இறைச்சியுடன் எடுத்துரைப்பதனை,

"நசைபெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;

பிடிபிசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழிஅவர் சென்ற ஆறே"12

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் அழகாக எடுத்துரைக்கின்றன. இப்பாடலில், தலைவன் சென்ற வழியில் ஆண்யானை ஒன்று தன் பிடியின் பசியைப் போக்க 'யா'என்னும் மரத்தின் பட்டையை உரித்து அதிலுள்ள ஈரத்தைப் பருகச் செய்யும். இக்காட்சியானது தலைவனின் நெஞ்சைத் தொடும். அவன் உன்மீது பெருங்காதல் கொண்டவனாதலின் உடன் திரும்பி வருவான் என்று குறிப்பாக உணர்த்தியுள்ளதனை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும்,

"கான மஞ்ஞை அரையின் முட்டை

வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்

குன்ற நாடன் கேண்மை என்றும்

நறுமன் வாழி தோழி உண்கண்"13

என்ற குறுந்தொகைப் பாடலகளில், மயில் அடைகாத்தற்குரிய முட்டை  அங்ஙனம் செய்யப்படாமல் பாறைமேல் தனித்துக் கிடப்பதேயன்றி அதனைக் குரங்கின் குட்டி உருட்டுவதைப் போல உடனிருந்து இன்புறுத்துவதற்குரிய தலைவனது பிரிவினால் அவள் துன்புறுதலேயன்றி ஊரார் அலர் தூற்றும் துன்பத்தையும் பெறலாயினாள் என்பதை இறைச்சி அமைய எடுத்தாளப்பட்டுள்ளது.

"பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்

ஊழ்ப்படு முதுகாய் உழையினம் கவருமஇ

அரும்பனி அற்சிரம் தீர்க்கும்

மருந்து பிரிது இல்லை அவர் மணந்த மார்பே"14

என்ற குறுந்தொகைப் பாடலடிகளில் பருவ நிகழ்வை சுட்டி தலைவனைப்  பிரிந்த தலைவி முன்பனிக்காலத்தில் விளைந்த குறும்பூழ்ப் பறவையின் காலைப் போன்ற உழுந்த முதிர்ந்த காய்களை மான் கூட்டங்கள் தின்னும். இதனைக் கண்ட தலைவிக்குத் தான் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற காலம் கடந்தும் தலைவன் வரவில்லையே என்ற துன்பம் தலைவிக்கு உண்டாகிறது. இங்கு மான் கூட்டங்களின் அன்புறு செயல்களும் பருவ நிகழ்வுகளும் பிரிவில் வாடும் தலைவிக்கு இந்நிகழ்வு வருத்தத்தைத் தரும் என்பதை குறிப்புப் பொருளாகப் புலவர் உரைப்பதனை அறிய முடிகின்றது.

            தலைவியை களவில் சந்தித்து வந்த தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிகின்றான். இதனை அறிந்த தோழி விரைவில் வரைந்து கொள்ளுமாறு இறைச்சியுடன் வேண்டுவதனை,

"கன்றுதன் பயமுலை மாந்த முன்றில்

தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட"15

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் நயமுடன் எடுத்துரைக்கின்றன. இதில், பெண்யானை தன் கன்றின் பசியைப் போக்குவதற்கும் அக்கன்றுக்குரிய பாலைப் பெறுவதற்கும் தினையை உண்கின்றது. அத்தகைய பெண்யானைகள் நிறைந்த நாட்டின் தலைவனே, நீயும் நாங்கள உன் வரவை எதிர்நோக்கி மகிழ்ந்திருக்குங்கால் நின் கடமைகளையும் தலைவியை வரைந்துக் கொள்வதையும் ஒருங்கே செய்வதற்குக் கருவியாகப் பொருளை ஈட்டி வருவதற்கு உரியவன் என்பதைப் பிரிதொரு பொருள்பட உணர்த்தியமையை அறிய முடிகின்றது.

உள்ளுறை - இறைச்சி : ஒற்றுமையும் வேற்றுமையும்

உள்ளுறை உவமம், இறைச்சி இரண்டும் சில ஒற்றுமைக் கூறுகளையும் வேறு சில நுட்பமான வேறுபாடுகளையும் உடையவை.

ஒற்றுமை

1.         இரண்டும் குறிப்பால் அறியப்படுவன.

2.         இரண்டும் கருப்பொருளின் அடிப்படையில் அமைவன.

3.         இரண்டும் அகப்பாடலுக்கே உரியன.

வேற்றுமை

1.உள்ளுறையில் கருப்பொருள் தொடர்பான சொல்லும், பொருளும் அதனால் பெறப்படும் குறிப்புப் பொருளும் நேருக்கு நேர் பொருந்தி வரும். கருப்பொருள் உவமை போலவும், அதன் வழி நாம் குறிப்பாக உணர்ந்து கொள்ளும் உட்கருத்து உவமேயம் போலவும் அமையும்.

2.இறைச்சியில் கருப்பொருளும் உட்பொருளும் ஒத்து முடியாமல் எதிர் மறையாகவும்  முடியலாம். சொற்பொருள் - அதற்கு இணையான குறிப்புப் பொருள் என்னும் இரண்டுக்கும் மேலாக வேறு ஒரு கருத்தும் வெளிப்படுவது இறைச்சியின் தனிப்பண்பாகும்.

3.புலவன் சொல்லுகின்ற உவமத்தோடு ஒத்துக் கூறக் கருதிய பொருள் வந்து முடியுமாறு அமைந்திருப்பது உள்ளுறை உவமம். புலவன் இயற்றிய செய்யுளின் பொருளுக்குப் புறத்தே தோன்றுமாறு அதாவது குறிப்பு பொருளினின்று தோன்றும் குறிப்பு பொருள் இறைச்சி.

ஆய்வு முடிவுரை

            தமிழ் இலக்கியங்களில் குறிப்புப் பொருளாக பாடும் முறையில் உள்ளுறை, இறைச்சி என்ற இரு பெரும் பிரிவுகளைக் கொண்டு பாடப்படும் பொழுது இலக்கியமானது எல்லையற்ற இன்பத்தை வழங்குவதனை "அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம் - தன்வயின் வருதலும் வகுத்த பண்பே" என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு ஏற்றார் போல் குறுந்தொகைப் பாடலடிகளில் உள்ளுறை, இறைச்சி இரண்டும் செய்யுளின் அழகையும் இன்பத்தையும் மிகுவிப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. காதல் உணர்வைக் குறிப்பதற்கும், தூண்டுவதற்கும், தலைவனை நெறிப்படுத்துவதற்குமே இறைச்சி பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதனை அறிந்து கொள்ள முடிகின்றது. சங்ககால மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும், மன வருத்தத்தையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூற 'உள்ளுறை உவமை' மற்றும் இறைச்சியை இலக்கியத்தின் பொருள் புலப்பாட்டு உத்திகளாகக் கையாண்டு கூறியுள்ளது நாகரிகத்தின் வெளிப்பாடு என்பதை விட உச்சநிலை  என்றே கொள்ளலாம் என்பதைத் தெளிவாக உணர முடிகின்றது.

சான்றெண் விளக்கம்:

1.         தொல். பொருள், அகத். நூ.49

2.         தொல். பொருள், அகத். நூ.51

3.         தொல். பொருள், அகத். நூ.50

4.         குறுந், பாடல்.3

5.         மேலது, பாடல்.42

6.         மேலது, பாடல்.91

7.         இளம்பூரணர் உரை, தொல்காப்பியம், பொருள், பொரு.நூ. 33

8.         நச்சினார்கினியர் உரை, தொல்காப்பியம், பொருள், பொரு.நூ.33

9.         இளம்பூரணர் உரை, தொல்காப்பியம், பொருள், பொரு.நூ. 34

10.       மேலது. நூ.35

11.       மேலது, நூ.168

12.       குறுந், பாடல்.37

13.       மேலது, பாடல்.38

14.       மேலது, பாடல்.68

15.       மேலது, பாடல்.225

துணை நின்ற நூல்கள்

1.குறுந்தொகை மூலமும் உரையும்,  டாக்டர்.உ.வே.சாமிநாதையர், டாக்டர், உ.வே.சா.நூல் நிலையம், சென்னை, 2018.

2.குறுந்தொகை மூலமும் உரையும், சோமசுந்தரனார். பே.வே. (உ.ஆ), கழக வெளியீடு, அப்பர் அச்சகம் சென்னை, 1978.

3.தொல்காப்பியம் பொருளதிகாரம் - மூலமும் உரையும், இளம்பூரனர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மறுபதிப்பு, 1982.

4.தொல்காப்பியம் உரைவளம் - பொருளதிகாரம் உவமவியல், ஆ.சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1992.

5.சிவலிங்கனார். ஆ., தொல்காப்பியம் கூறும் உள்ளுறையும் இறைச்சியும், உலகத் தமிழ்க் கல்வி இயக்கம், சென்னை, 1985.

6.சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கிய கொள்கைகள்), தமிழண்ணல், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2010.

7.பாலசுந்தரம். ச. (உ.ஆ.), தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை, அகத்திணையியல் புறத்திணையியல், தஞ்சை, முதற்பதிப்பு, 1989.

8.ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் 1985, மதுரை, நல்ல குறுந்தொகை, கா.காளிமுத்து அவர்களின் கட்டுரை, 1981.

9.குறுந்தொகை தெளிவுரை, புலியூர்க்கேசிகன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, 2017.

10.குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு, மனோன்மணி சண்முகதாஸ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2000.

11.குறுந்தொகை - தமிழ்க்காதல் (கற்றுடைத்துக் கோத்தது), கு.மா.பாலசுப்பிரமணியம், முதற் பதிப்பு, பாரதி புத்தகாலயம், சென்னை, 2007.

12.குமரன். இரா., சங்க இலக்கியத்தில் கருத்துப் புலப்பாட்டு உத்திகள், அபிநயா பதிப்பகம், தஞ்சாவூர், 2001.

13.சங்க இலக்கிய வரலாறு, பேரா.காவ்யா சண்முகசுந்தரம், சென்னை, 2012.

 


No comments:

Post a Comment